4,000 கிலோ வெடிபொருட்கள்: ஒடிஷாவில் நக்சல் கும்பல் கொள்ளை
4,000 கிலோ வெடிபொருட்கள்: ஒடிஷாவில் நக்சல் கும்பல் கொள்ளை
4,000 கிலோ வெடிபொருட்கள்: ஒடிஷாவில் நக்சல் கும்பல் கொள்ளை
ADDED : ஜூன் 02, 2025 01:29 AM

ஒடிஷாவில் கல் குவாரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 4,000 கிலோ வெடிபொருட்களை வழிமறித்து, நக்சல் கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல் ஆதிக்கத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒடுக்கும் நோக்கில், அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 27ம் தேதி, ஒடிஷாவின் சுந்தர்கர் பகுதியில் உள்ள கல் குவாரிக்கு தேவையான வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை, ஆயுதம் ஏந்திய 40க்கும் மேற்பட்ட நக்சல் கும்பல் வழிமறித்தது.
அப்போது டிரைவரை மிரட்டி, லாரியை அக்கும்பல் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து லாரி டிரைவர் தேவ்நாத் தாப்போ என்பவர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துவங்கினர்.
டிரைவர் அளித்த தகவலின்படி லாரிக்குள் 200 பெட்டிகளில், 4,000 கிலோ வெடிபொருட்கள் இருந்ததை என்.ஐ.ஏ., அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதற்கிடையே, கொள்ளையடித்து சென்ற வெடிபொருட்களை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாராண்டா வனப்பகுதியில் நக்சல்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என, பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
நக்சல்கள் கொள்ளையடித்துச் சென்ற 4,000 கிலோ வெடிபொருட்களை கண்டறியும் பணியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதுடன், இதுதொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்
- நமது சிறப்பு நிருபர் -.