இளம்பெண் பலாத்காரம் கங்காவதியில் 6 பேர் கைது
இளம்பெண் பலாத்காரம் கங்காவதியில் 6 பேர் கைது
இளம்பெண் பலாத்காரம் கங்காவதியில் 6 பேர் கைது
ADDED : பிப் 12, 2024 06:52 AM
கொப்பால்: கணவரை தேடி, கங்காவதிக்கு சென்ற இளம் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பெங்களூரின் கோரகுன்டேபாளையாவில் வசிக்கும், 25 வயது இளம்பெண், வீட்டு வேலை செய்து பிழைத்தார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன், கொப்பால், காரடகியின், சித்தாபுராவை சேர்ந்த மஞ்சுநாத்துடன், திருமணம் நடந்தது. தம்பதி பெங்களூரில் வசிக்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக, தம்பதிக்கு சிறு, சிறு விஷயத்துக்கும் சண்டை வந்தது. இதனால் கோபமடைந்த கணவர், தன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். கணவரை தேடிக்கொண்டு, பிப்ரவரி 8ம் தேதி, இரவு 9:00 மணியளவில், கங்காவதி பஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை காண, கணவர் மஞ்சுநாத்தும் வந்திருந்தார்.
அங்கேயும் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஆறு வாலிபர்கள் அங்கு வந்து குறுக்கிட்டனர். அப்போது பெண், 'இது கணவன், மனைவி இடையிலான சண்டை. நீங்கள் தலையிடாதீர்கள்' என கூறியும், அந்த வாலிபர்கள், பெண்ணுக்கு தொல்லை கொடுத்து, கையை பிடித்து இழுத்தனர்.
அனைவரும் சேர்ந்து கணவர் மஞ்சுநாத்தை தாக்கினர். அப்பெண், தன்னை தற்காத்துக் கொள்ள, பஸ் நிலையம் எதிரில் உள்ள பூங்காவுக்குள் ஓடி ஒளிந்தார். இளைஞர்களில் ஒருவர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து, அவர் கங்காவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர். தம்பதிக்கு தொந்தரவு கொடுத்து, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.