90 டிகிரியில் மேம்பால திருப்பம்: ம.பி.,யில் பீதி
90 டிகிரியில் மேம்பால திருப்பம்: ம.பி.,யில் பீதி
90 டிகிரியில் மேம்பால திருப்பம்: ம.பி.,யில் பீதி
ADDED : ஜூன் 12, 2025 11:37 PM

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில், 90 டிகிரியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் டிசைன், பயணியரின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கேள்வியையும் எழுப்பி உள்ளது.
போபாலின் ஐஷ்பாக் ஸ்டேடியம் அருகே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,126 அடி நீளத்திலும் 28 அடி அகலத்திலும் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஐஷ்பாக் ரயில்வே கிராஸிங்கில் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாததால், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் தினந்தோறும் பயனடைவர்.
இந்தநிலையில், பாலத்தின் முடிவில் உள்ள 90 டிகிரி கோணம், கடும் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இந்த திடீர் வளைவு விபத்து ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
குறிப்பாக மோசமான வானிலை அல்லது வெளிச்சம் குறைவாக இருக்கும்போது பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் மத்திய பிரதேச பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். இடப்பற்றாக்குறை காரணமாக இந்த வடிவமைப்பு தவிர்க்க முடியாதது என்றும் மெட்ரோ நிலையம் இருப்பதால் வேறு வழியில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
அதே நேரத்தில் தேவையில்லாத அபாயங்களைக் குறைக்க, பாலத்தில் சிறிய வாகனங்களை மட்டுமே அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும், வேக விதிமுறைகள் உட்பட இந்திய சாலை பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி வாகனங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.