Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மைசூரில் வெளிநாட்டவரின் அன்னபூரணி

மைசூரில் வெளிநாட்டவரின் அன்னபூரணி

மைசூரில் வெளிநாட்டவரின் அன்னபூரணி

மைசூரில் வெளிநாட்டவரின் அன்னபூரணி

ADDED : ஜன 27, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
சுற்றுலா பயணியரை பொறுத்தவரை கர்நாடகாவின் மைசூரு நகர் சொர்க்கமாகும். தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்களுக்கு மைசூரு பாணி உணவு, சிற்றுண்டியை ருசிக்க விரும்புவர். இவர்களுக்காகவே, மைசூரில் பெண்ணொருவர் தன் வீட்டில் உணவு வசதி செய்துள்ளார்.

மைசூரு பாணி


மைசூரு நகருக்கு வரும் சுற்றுலா பயணியரில், வெளிநாட்டவரே அதிகம். இவர்கள் மைசூரு அரண்மனை, மிருகக்காட்சி சாலை, கே.ஆர்.எஸ்., பிருந்தாவன், சாமுண்டி மலை உட்பட, பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர். மைசூரு பாணி உணவு, சிற்றுண்டியை சாப்பிட விரும்புவர்.

பலரும் ஹோட்டல்களின் உணவை விட, வீட்டு உணவையே அதிகம் விரும்புகின்றனர். இத்தகைய சுற்றுலா பயணியருக்கு, மைசூரின் பெண்ணொருவர் அன்னபூரணியாக விளங்குகிறார். தன் வீட்டில் வெளிநாட்டவருக்கு உணவு தயாரித்து வழங்கி, விருந்தோம்புகிறார்.

மைசூரின் கோகுலத்தில் வசிப்பவர் சசிகலா. இவரது கணவர் அசோக், டிராவல்ஸ் ஏஜன்டாக பணியாற்றுகிறார். இவருக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அறிமுகம் உள்ளது.

ஒரு முறை மைசூருக்கு வந்த வெளிநாட்டு தம்பதி, அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர். அதன்பின் மைசூரின் பாரம்பரிய உணவை ருசிக்க வேண்டும் என, விரும்பினர்;

ஹோட்டலுக்கு சென்றனர். அங்கும் கூட அவர்களுக்கு மைசூரு பாரம்பரிய உணவு, தின்பண்டங்கள் கிடைக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தனர்.

பாரம்பரிய உணவு


மைசூரின் பாரம்பரிய உணவுகள், அதன் சிறப்பு குறித்து, ஏற்கனவே புத்தகத்தில் படித்திருந்த வெளிநாட்டு தம்பதி, ஒரு முறையாவது அந்த உணவை சாப்பிட்டே ஆக வேண்டும் என, ஆர்வம் குறையவில்லை.

அப்போதுதான் இவர்களுக்கு டிராவல்ஸ் ஏஜன்ட் அசோக் அறிமுகமானார். இவரிடம் தங்களின் விருப்பத்தை கூறி, ஏற்பாடு செய்யும்படி மன்றாடினர். அதன்பின் அசோக் வேறு வழியின்றி, வெளிநாட்டு தம்பதியை தன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

தன் மனைவி சசிகலா மூலமாக, மைசூரு பாக் உட்பட மைசூரின் பாரம்பரிய உணவு தயாரிக்கும்படி செய்து, வெளிநாட்டு தம்பதிக்கு பரிமாறினார்.

அன்று ஆரம்பமான இவரது விருந்தோம்பல், இன்றும் தொடர்கிறது. இவரது சுவையான சமையலுக்காகவே, வெளிநாட்டு விருந்தினர்கள் தேடி வருகின்றனர்.

மைசூருக்கு வரும் வெளிநாட்டவர், சசிகலா வீட்டுக்கு நிரந்தர விருந்தாளிகளாகி விட்டனர். மைசூருக்கு வந்தால், இவரது வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு, மன நிறைவுடன் செல்கின்றனர்.

மைசூரின் பெருமை


தன் வீட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு, வாழை இலையில் சசிகலா மைசூரு பாக், சாதம், சாம்பார், சப்பாத்தி, மைசூரு பாணியில் சட்னி, புளியோதரை, ஊறுகாய், துவையல் உட்பட, விதவிதமான உணவுகளை பரிமாறுகிறார். இதன்மூலம் வெளிநாடுகளில் மைசூரின் பெருமையை உணர்த்தும் சேவையை சத்தமில்லாமல் செய்கிறார்.

அது மட்டுமின்றி, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை ஆரத்தி எடுத்து, சம்பிரதாயப்படி வரவேற்கிறார். உணவு முடிந்த பின், ஆண்களுக்கு சந்தனம், பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மைசூரு மல்லிகைப்பூ தாம்பூலம் வழங்கப்படுகிறது.

விருந்தோம்பல்


இத்தகைய சிறப்பான விருந்தோம்பல், வெளி நாட்டவரின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது.

பிரான்ஸ், லண்டன், இத்தாலி, தென் ஆப்ரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணியர், சசிகலாவின் விருந்தோம்பலை பெற்று சென்றுள்ளனர்.

இவரது வீடு, வெளிநாட்டு விருந்தினர் இல்லமாகவே மாறியுள்ளது. இவர்களை பொறுத்தவரை, சசிகலா அன்னபூரணியாக விளங்குகிறார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us