Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

ADDED : ஜன 17, 2024 02:13 AM


Google News

ஐ.டி., ஊழியர் தற்கொலை


பெங்களூரை சேர்ந்தவர் சந்தேஷ், 35; ஐ.டி., நிறுவன ஊழியர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குடகு மடிகேரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை தங்கியிருந்த அறையில், திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி இருந்த கடிதத்தில், 'சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என்று குறிப்பிட்டு உள்ளார்.

வாலிபர் மீது தாக்குதல்


தட்சிண கன்னடா புத்துார் முண்டூரில் வசிப்பவர் சந்தோஷ், 25. ஹிந்து அமைப்பை சேர்ந்தவர். அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, வீடு, வீடாக சென்று நோட்டீஸ் வினியோகித்து வந்தார். நேற்று காலை சந்தோஷை, முண்டூரை சேர்ந்த தனஞ்ஜெய், அவரது உறவினர்கள் முன்விரோதம் காரணமாக தாக்கினர். படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

மகன் இறந்ததால் தந்தை தற்கொலை


தட்சிண கன்னடா, பெல்தங்கடி உஜ்ரே கிராமத்தில் வசித்தவர் யோகேஷ், 41. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் யக் ஷித், 14. இவர் கடந்த 3ம் தேதி தனது தம்பியுடன் சண்டை போட்டார். இதனால் அவரை தந்தை யோகேஷ் கண்டித்தார். மனம் உடைந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் சாவுக்கு நான் தான் காரணம் என்று, யோகேஷ் தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

சிலிண்டர் வெடித்து 8 பேர் படுகாயம்


பெங்களூரு எலஹங்கா எல்.பி.எஸ்., சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. வீடு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி அந்த வீட்டில் வசித்த, ஒரே குடும்பத்தின் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர், போலீசார் இணைந்து மீட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் வாலிபர் பலி


ராய்ச்சூரை சேர்ந்தவர் பசவராஜ், 24. பெங்களூரில் தங்கி இருந்து, 'ஸ்விகி'யில் உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு மைசூரு ரோடு, சாட்டிலைட் பஸ் நிலையம் அருகில் பைக்கில் சென்றார். அந்த வழியாக பின்னால் வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட பசவராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவரை பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

காமுக வாலிபர் கைது


ஹூப்பள்ளி ஜுப்ளி சதுக்கத்தை சேர்ந்தவர் பயாஸ், 27. சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்தார். அங்கு வரும் ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களின், மொபைல் எண்ணை வாங்கி கொள்வார். பின்னர் நட்பாக பேசுவார். அதன்பின்னர் ஆபாச படங்களை அனுப்பும்படியும், நிர்வாணமாக வீடியோ காலில் பேசும்படியும் தொல்லை கொடுத்து உள்ளார். இதுபற்றி அறிந்ததும் ஒரு சமூகத்தினர், பயாஸை பிடித்து நேற்று தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.

காவலர்களை தாக்கிய கைதி


கலபுரகி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஷாகித் குரேஷி. இவரது கூட்டாளிகள் இருவர் நேற்று காலை, சிறைக்கு வெளியே இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலங்கள் வீசினர். இதனை கவனித்த சிறை காவலர்கள் இருவர், கஞ்சா பொட்டலங்களை எடுத்தனர். அப்போது அங்கு வந்த ஷாகித், கஞ்சாவை கொடுக்கும்படி சிறை காவலர்களிடம் கேட்டார். அவர்கள் கொடுக்க மறுத்ததால் தாக்கினார். இதுகுறித்து பர்தஹாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

காதலியை கத்தியால் குத்திய காதலன்


ஷிவமொகா அடோனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேத்தன், 28, அம்பிகா, 22. இருவரும் காதலர்கள். நேற்று மதியம் ஷிவமொகாவுக்கு வந்தனர். பஸ் நிலையம் அருகில் நின்று பேசினர். அப்போது ஏதோ காரணத்திற்காக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சேத்தன், அம்பிகாவை கத்தியால் குத்தினார். அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேத்தனை மடக்கி தர்ம அடி கொடுத்தனர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சேத்தன், அம்பிகாவை கோட்டே போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலி


சீனிவாசப்பூர் வெங்கடேசப்புராவை சேர்ந்த முன்னாள் டவுன் சபை உறுப்பினர் மஞ்சுநாத்தின் மகன் சிராக், 28. இவர் காரில் நேற்று சிந்தாமணிக்கு சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் பிரவீன், 24, என்பவர் இயக்கினார். திடீரென காரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, சாலையில் இருந்து பள்ளத்தில் கார் உருண்டது.

இதில், சிராக் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் டிரைவர் பிரவீன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us