ADDED : மே 01, 2026 12:36 AM

பூட்டிய வீடுகளில் மட்டுமே கொள்ளை ரூ.30 லட்சம் நகை, பணம் பறிமுதல்
புதுடில்லி: டில்லியின் ஷாதாரா மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை மட்டுமே குறிவைத்து, இரவில் அந்த வீடுகளில் கொள்ளையடித்து, தப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்த, 34 வயது கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
நியு சீமாபூர் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் என்ற ஷாஹித். இவர், டில்லியில் ஷாதாரா மாவட்டத்தில் உள்ள பூட்டிய வீடுகளை மட்டுமே கொள்ளையடித்து வந்தார். அவரை பிடிக்க, போலீசார் கடும் முயற்சி மேற்கொண்டனர்.
போலீசின் பிடியில் சிக்காமல் இருக்க கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் ஒதுக்குபுறமான இடங்களில் பகல் பொழுதில் ஒதுங்கும் பழக்கம் கொண்ட அவரை ஷாதாரா போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
பரோலில் வந்த 'மாஜி' கமாண்டோ குருகிராமில் சுட்டுக்கொலை
குருகிராம்: டில்லி அருகே உள்ள குருகிராமில், கறுப்பு பூனை படையின் முன்னாள் வீரர், பரோலில் இருந்து வெளி வந்த சில நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மானேசர் போலீஸ் நிலைய எல்லையில், 2018ல், காசன் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த பகதுார் சவுகான் என்பவரை படுகொலை செய்தது தொடர்பாக, சுந்தர் பவுஜி, 55, என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கறுப்புப்பூனை படையில் பணியாற்றிய அவர், கடந்த மார்ச் 29ல், பரோலில் வெளி வந்திருந்தார்.
நேற்று காலையில் அவர் தன் நண்பருடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தன் கூட்டாளிகளுடன் வந்த பகதுார் சவுகானின் மகனான ரோஹன் என்பவர், தன் தந்தை கொன்றதற்கு பழி வாங்கும் வகையில், சுந்தர் பவுஜியை சுட்டுக் கொன்றார்.
தன்னை பிடிக்க வந்தவர்களை, துப்பாக்கிகளை காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பியே ரோஹனை போலீசார் தேடி வருகின்றனர்.
பகதுார் சவுகானுக்கும், சுந்தர் பவுஜிக்கும் இடையே, சொத்து விவகாரம் தொடர்பாக, முன் விரோதம் இருந்தது. அதனால், பகதுார் சவுகானை சுந்தர், 2018 ல் சுட்டுக் கொன்றார்.
பெண்ணை கட்டி போட்டு
வீட்டில் துணிகர கொள்ளை
புதுடில்லி: தெற்கு டில்லியில் வீடு ஒன்றில் புகுந்த ஆறு பேர் கும்பல், வீட்டில் இருந்த, 35 வயது பெண்ணின் வாயை கட்டி, பாத்ரூமில் போட்டு, வீட்டிலிருந்த நகை, பணத்தை சுருட்டி தப்பியது.
கடந்த, 13ம் தேதி, இந்த துணிகர கொள்ளை நடந்தது. ஹர் கோவிந்த் என்கிளேவ் என்ற இடத்தில் நுழைந்த, 22 - 29 வயதுடைய, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள், திடீரென அந்த வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி, அவரின் வாயை கட்டி, வீட்டில் பாத்ரூமில் அடைத்தனர்.
முன்னதாக, வீட்டு வேலை பார்ப்பதற்காக, அந்த பெண்ணின் கணவர் தங்களை அனுப்பினார் என தெரிவித்து, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். தப்பிய அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் நேற்று ஐந்து பேரை, ராஜஸ்தானில் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகின்றனர்.
மொபைல் போன் கடைகளில்
கொள்ளை: கும்பல் தலைவன் கைது
புதுடில்லி: டில்லியின் பல இடங்களில், இரவு நேரத்தில், பூட்டியிருந்த மொபைல் போன் ஷோரூம்களை உடைத்து திருடிய கும்பலின் ஹரியானாவின் மேவாட் பகுதியில் செயல்படும் கொள்ளை கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் நுாஹ் என்ற இடத்தை சேர்ந்தவர் அர்மான். டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் பூட்டியுள்ள மொபைல் போன் ஷோரூம்களை உடைத்து திறப்பதில் வல்லவர். இவர் தலைமையிலான கும்பல், கடந்த மூன்றாண்டுகளாக பல இடங்களில் கொள்ளையடித்து தப்பி வந்தது. அர்மானை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர் வசமிருந்த நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.





