Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 'வந்தே பாரத்' ரயிலில் பயணித்த சிறுமி

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 'வந்தே பாரத்' ரயிலில் பயணித்த சிறுமி

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 'வந்தே பாரத்' ரயிலில் பயணித்த சிறுமி

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 'வந்தே பாரத்' ரயிலில் பயணித்த சிறுமி

UPDATED : செப் 14, 2025 07:31 AMADDED : செப் 14, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
கொச்சி : அறுவை சிகிச்சைக்காக உடலுறுப்புகள் விமானத்தில் கொண்டு வரப்பட்டன; ரயிலில் எடுத்து வரப்பட்டன என்ற செய்திகளை பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக, நோயாளியை 'வந்தே பாரத்' ரயிலில் அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த பில்ஜித், 18, என்ற மாணவர், சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். எர்ணாகுளத்தின் கொச்சியில் உள்ள, 'லிட்டில் பிளவர்' என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அவரது இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்த தகவல், கொல்லம் மாவட்டத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று இதயத்திற்காக காத்திருந்த 13 வயது சிறுமியின் குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக உடலுறுப்புகள் எடுத்து செல்லப்படும் நிலையில், அறுவை சிகிச்சைக்காக சிறுமியை கொச்சிக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி, கொல்லத்தில் இருந்து வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி, கொச்சியில் உள்ள 'லிசி' என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லிட்டில் பிளவர் மருத்துவமனையில் இருந்து பில்ஜித்தின் இதயம், லிசி மருத்துவமனைக்கு 20 நிமிடங்களில் எடுத்து வரப்பட்டது.

போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தியதால், இந்த துாரத்தை 20 நிமிடங்களில் கடக்க முடிந்தது. கொல்லத்தில் இருந்து கொச்சி 150 கி.மீ., தொலைவில் உள்ளது. சாலை மார்க்கமாக சென்றால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகும். ஆம்புலன்சில் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதையடு த்து, அந்த சிறுமியை வந்தே பாரத் ரயில் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் அழைத்து வந்தனர்.

மருத்துவமனையில் மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின், சிறுமி தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us