கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை
ADDED : ஜூன் 07, 2025 02:33 AM

பெங்களூரு:கூட்ட நெரிசலில் சிக்கி ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்த வழக்கில், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட மூன்று பேரை கைது செய்ய தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் கையில், கடந்த 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மைதானத்திற்கு முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கிரிஷ் அளித்த புகாரில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தினர், ஆர்.சி.பி., நிர்வாகம், டி.என்.ஏ., என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் மீது, கப்பன் பார்க் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
அரசு தான்
இந்நிலையில் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சங்க தலைவர் ரகுராம் பட், செயலர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் நேற்று ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''மனுதாரர்கள் இந்த சம்பவத்தில் தங்களுக்கு பங்கு இல்லை என்று கூறி பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.
''விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விட்டு வெளியேற வேண்டாம். மனுதாரர்களை போலீஸ் கைது செய்யக் கூடாது,'' என உத்தரவிட்டார். மனு மீதான அடுத்த விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிறையில் அடைப்பு
இதற்கிடையில் 11 பேர் இறந்த வழக்கில், ஆர்.சி.பி., அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே, டி.என்.ஏ., நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யு, ஊழியர்கள் கிரண், சுமந்த் ஆகிய நான்கு பேர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர்.