Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி

அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி

அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி

அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி

ADDED : அக் 08, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : அரசின் தலைவராக, 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தன் இடைவிடாத முயற்சி,” என, குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் முதல்வராக, 2001 அக்., 7ல், பா.ஜ.,வைச் சேர்ந்த நரேந்திர மோடி, 75, முதன்முறையாக பதவி யேற்றார்; 2014 வரை அப்பதவியில் தொடர்ந்தார்.

குஜராத் முதல்வர் கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தலில் தே.ஜ., கூட்டணி வென்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக, 2014 மே மாதத்தில் முதன்முறையாக அவர் பதவியேற்றார்.

கடந்த 2019 மற்றும் 2024 லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர், தொடர்ச்சியாக, 11 ஆண்டுகள் பிரதமராக பதவி வகிக்கிறார். அரசின் தலைமை பொறுப்பில், பிரதமர் மோடி 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:


குஜராத் முதல்வராக, 2001ல் இதே நாளில், முதன்முறையாக பதவியேற்றேன். அரசின் தலைவராக, 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி.

இத்தனை ஆண்டுகளாக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், என்னை வளர்த்த இந்த மகத்தான தேசத்தின் முன்னேற்றத்துக்காகவும் பங்களிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.

லஞ்சம் வாங்கக்கூடாது மிகவும் இக்கட்டான நிலையில் தான், குஜராத் முதல்வர் பொறுப்பை என்னிடம் கட்சி ஒப்படைத்தது.

அந்த ஆண்டில், மிகப்பெரிய நிலநடுக்கத்தால் குஜராத் பாதிக்கப்பட்டது. புது உத்வேகத்துடன் குஜராத்தை மறுகட்டமைப்பு செய்தோம். நான் முதல்வராக பதவியேற்ற போது, என் தாயார் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது.

'உன் வேலை பற்றி எனக்கு அதிகம் புரியவில்லை, ஆனால் நான் இரண்டு விஷயங்களை மட்டுமே கூற விரும்புகிறேன். முதலாவது, நீ எப்போதும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும்; இரண்டாவது, நீ ஒருபோதும் லஞ்சம் வாங்கக்கூடாது' என, கூறினார். அதை பின்பற்றியே இன்று வரை பணியாற்றி வருகிறேன்.

கடந்த 11 ஆண்டுகளில், இந்திய மக்களாகிய நாம் ஒன்றிணைந்து பல மாற்றங்களை அடைந்துள்ளோம். 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். உலகப் பொருளாதாரங்களில் நம் நாடு சிறந்து விளங்குகிறது.

உலகின் மிகப்பெரிய சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றின் தாயகமாக நாம் இருக்கிறோம். நம் விவசாயிகள் புதுமைகளை உருவாக்கி, நம் தேசம் தன்னிறைவு பெறுவதை உறுதி செய்கின்றனர்.

நாங்கள் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். நம் நாட்டை அனைத்து துறைகளிலும் தற்சார்பு பெற்றதாக மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us