22ல் புறப்படுகிறது சுபான்ஷூ சுக்லா குழு
22ல் புறப்படுகிறது சுபான்ஷூ சுக்லா குழு
22ல் புறப்படுகிறது சுபான்ஷூ சுக்லா குழு
ADDED : ஜூன் 18, 2025 11:54 PM

புதுடில்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் வரும் 22ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை செய்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் வாயிலாக இன்று புறப்படுவர் என, 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, கால அவகாசம் தேவை' என, நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் 22ம் தேதி புறப்படுவர் என, 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
முன்னதாக, இக்குழு கடந்த மாதம் 29ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், அப்பயணம் கடந்த 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது. எனினும், மோசமான வானிலை காரணமாக அத்திட்டமும் தள்ளிப்போனது. இதேபோல், கடந்த 11ம் தேதி ஏவ திட்டமிட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.