Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாக்குறுதி கொடுத்த தேஜஸ்வி

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாக்குறுதி கொடுத்த தேஜஸ்வி

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாக்குறுதி கொடுத்த தேஜஸ்வி

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாக்குறுதி கொடுத்த தேஜஸ்வி

ADDED : அக் 10, 2025 12:24 AM


Google News
பாட்னா: பீஹாரில், 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நவ., 6ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவ., 11ம் தேதியும் நடக்கிறது.

ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணியும், ஆட்சியை பிடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., தலைமையிலான, 'இண்டி' கூட்டணியும் காய்களை நகர்த்தி வருகின்றன.

பெ ண்கள் சுயதொழில் துவங்க ஆண்டுக்கு, 10,000 ரூபாய் உதவித் தொகை, கிராம நல பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாய் உதவித்தொகை ஆகிய திட்டங்களை, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், நிதிஷ் குமார் அரசு அறிவித்தது.

இதற்கு பதிலடியாக, ஆர்.ஜே.டி., தலைவரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி, முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தேஜஸ்வி கூறியதாவது:

பீஹாரை எப்படி வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வது என்பது தான் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் அரசுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை; வேலைவாய்ப்பின்மை தான் மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்னை என்பதை, அவரது அரசு உணராமலே இருக்கிறது.

வேலைவாய்ப்பு வழங்குவதாக, தே.ஜ., கூட்டணி தலைவர்கள் வாக்குறுதியும் தரவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம்.

இதுவரை அரசு பணிக்கே செல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்காக புதிய சட்டத்தை கொண்டு வருவோம். அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இந்த சட்டத்தை நிறைவேற்றுவோம். அதன்பின், பீஹாரில் எந்தவொரு குடும்பத்துக்கும் அரசு வேலை கிடைக்கவில்லை என்ற நிலையே இருக்காது.

இந்த இலக்கு, 20 மாதங்களுக்குள் எட்டப்படும் என வாக்குறுதி தருகிறேன். நிச்சயம் இது நடக்கும். இது வெற்று பேச்சு அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பீஹாரி ல் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசை வீழ்த்தி, ஆட்சியை பிடிப்பதற்காக, தேஜஸ்வி இந்த அதிரடி வாக்குறுதியை அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஐ., பயன்படுத்த

கட்சிகளுக்கு கட்டுப்பாடு

பீஹார் சட்டசபை தேர்தலில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அரசியல் ஆதாயத்துக்காக கட்சிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பிரசாரத்துக்காக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடும்போது, அது ஏ.ஐ., தயாரிப்பா அல்லது அசல் வீடியோவா என்பதை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். தேர்தல் சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் எதையும் பதிவிடக் கூடாது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'டீப் பேக்' எனப்படும் போலி வீடியோக்களை வெளியிடுவது, பொய்யான தகவல்களை பரப்புவது தவிர்க்கப்பட வேண்டும். சமூக ஊடகங்களை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us