பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; டில்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; டில்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
ADDED : மே 09, 2026 10:03 PM

புதுடில்லி: நம் நாட்டின் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம், மற்ற அரசியல் கட்சியினரின் அலுவலகங்கள், அரசு கட்டடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல்களை அரங்கேற்றவும், துப்பாக்கிச்சூடு, ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தவும் பயங்கரவாத அமைப்பினர் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து டில்லி போலீசார், மத்திய பாதுகாப்பு படைகளுடன் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்காக முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கை சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் வெடிகுண்டு செயலிழப்பு குழு, மோப்ப நாய்கள் பிரிவு மற்றும் டில்லி தீயணைப்புத்துறை உள்ளிட்ட மீட்புக் குழு எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய நபர் அல்லது நடமாட்டங்கள் இருந்தாலோ, சாலையில் கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் இருப்பது தெரிந்தாலோ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
