ADDED : ஜூலை 30, 2010 04:47 PM

'கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே' என்று அவ்வை சொன்னது அறிவை வளர்க்கவே.
கல்வி மீது மாணவர்களின் ஆர்வம் வியக்கத்தக்கது. அதே நேரம், கல்விச்சாலைகளுக்கு செல்ல எடுக்கும் முயற்சிகள் ஆபத்தானவை. விடலைப்பருவத்தில் வீம்பு பிடிக்கும் மாணவர்கள், பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்கின்றனர்; இதில் பலர் மேற்கூரை பயணத்தை பெருமையாக கருதி 'உயரே' ஏறுகின்றனர். இதனால் சாதிக்க வேண்டிய வயதில் விபத்தில் சிக்கி வாழ்க்கை பாழ்படுவதே மிச்சம்.இலவச பஸ் பாஸ் தரும் போக்குவரத்து கழகங்கள், மாணவர்களின் அவதியை போக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். பெற்றோரும் பாதுகாப்பான பயணத்தை பகுத்து உணர்ந்து, ஏற்பாடு செய்யலாம். இவற்றை யாரும் பின்பற்றுவது இல்லை. அதனால் தான் படிக்கட்டில் கால் கட்டை விரல் வைக்க இடம் கிடைத்தால் போதும் என மாணவர்கள் அந்தரத்தில் தொங்குகின்றனர்; 'மனம் கவர்ந்த மாணவிகளின் பார்வை பட வேண்டும்' என, பல மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தொடர்கின்றனர். அறிவை வளர்க்கும் காலத்தில், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகின்றனர். இவர்களின் பயணத்தில் 'உயிர் பணயத்தின்' விபரீதத்தை உணர்த்துவது யார்? ஒரு நிமிடம் சிந்தித்தால் தானாகவே உணரலாம்.