அழைப்பு இப்ப வருமோ... எப்ப வருமோ...? : திக்... திக்... மனதுடன் திருப்பூர் எம்.எல்.ஏ.,
அழைப்பு இப்ப வருமோ... எப்ப வருமோ...? : திக்... திக்... மனதுடன் திருப்பூர் எம்.எல்.ஏ.,
அழைப்பு இப்ப வருமோ... எப்ப வருமோ...? : திக்... திக்... மனதுடன் திருப்பூர் எம்.எல்.ஏ.,

கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என மார்தட்டிக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க., தலைமை. இக்கோட்டையை தகர்த்தெறியும் முயற்சியில் தி.மு.க., அதிதீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக, சட்டசபைத் தேர்தலுக்கு முன் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றவும் தயாராக உள்ளது.
இதற்கு பதிலடி தரும் வகையிலும், தனது பலத்தைக் காட்டும் வகையிலும், துணை முதல்வர் ஸ்டாலினை வரவழைத்து, ஆதரவாளர்களை திரட்டி, பாராட்டு விழா நடத்தினார் கோவிந்தசாமி. அக்கூட்டத்தில், தி.மு.க.,வில் இணைய தயாராக இருப்பதாக, தன்னுடைய விருப்பத்தை,வெளிப்படையாகவே தெரிவித்தார். துணை முதல்வர் பேசும் போது, 'கோவிந்தசாமியை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்; அவரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு தெரியும்; அது, கோவிந்தசாமிக்கும் புரியும்' என்று 'செக்' வைத்தார். தி.மு.க.,வுக்குள் கோவிந்தசாமி ஐக்கியமாவதற்கு வெகுகாலமில்லை என்றாலும், முதல்வர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதை புரியவைத்தார், ஸ்டாலின். அதன்பின், கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். அந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், கோவிந்தசாமிக்கு பேச வாய்ப்பளித்த முதல்வர், தனது பேச்சின்போது, 'கம்யூனிஸ்டுகளால் தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்கப்பட்ட கோவிந்தசாமி' என தனக்கே உரிய பாணியில் பாசமழை பொழிந்தார். முதல்வர் முன்னிலையில், தனது ஆதரவாளர்ளுடன் தி.மு.க.,வில் இணைய கோவிந்தசாமி விரும்புகிறார். இதற்காக, நல்ல நாள் பார்த்து வருகிறார். இம்மாத மத்தியில் சென்னையில் இணைப்பு விழா நடத்தலாம் என முடிவு செய்து, முதல்வரின் இசைவுக்காக காத்திருக்கிறார். இப்போதே அழைப்பு வருமா அல்லது தேர்தல் வரை முதல்வர் காக்க வைப்பாரா என எம்.எல்.ஏ., தரப்பினர் திக்... திக்... மனநிலையில் காத்திருக்கின்றனர்.
வாய்ப்பு கிடைக்குமா? : கோவிந்தசாமியை தி.மு.க.,வுக்குள் இழுத்து, சட்டசபை தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும். அத்தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., போராட வேண்டியிருக்கும். அத்தொகுதியில் போட்டியிட, கோவிந்தசாமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், கம்யூ., தோழர்கள் எதிர் வேலை பார்த்து, அவரை காலி செய்து விடுவர். இது, அ.தி.மு.க.,வுக்கே சாதகமாக அமையும். தி.மு.க.,வே நேரடியாக நின்று, நேருக்கு நேர் மோதினால் மட்டுமே தேர்தல் களம் சூடுபிடிக்கும். எனவே, கோவிந்தசாமிக்கு மீண்டும் தேர்தல் களம் கிடைக்குமா என்பது சந்தேகமே.