தினமலர் செய்தி எதிரொலி அரசூர் பள்ளிக்கு புதிய கட்டடம்
தினமலர் செய்தி எதிரொலி அரசூர் பள்ளிக்கு புதிய கட்டடம்
UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM
ADDED : ஜூன் 23, 2011 10:32 AM
தினமலர் செய்தி எதிரொலியாக, அரசூர் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது.
சூனாம்பேடு அடுத்த வன்னியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசூர் கிராமத்தில், 1956ம் ஆண்டு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 14 மாணவியர் உட்பட 24 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள இரண்டு கட்டடங்களில், ஒரு கட்டடம் பழுதாக இருந்ததால், பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
மற்றொரு கட்டடமும், கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், ஜன்னல்கள் மற்றும் காரைகள் பெயர்ந்து, கட்டடம் கீழே இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்தது. இது குறித்து, பிப்., 28ம் தேதி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்படட்டது.
இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, கட்டடம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அடுத்த மாதத்தில் முடிந்து விடும் என, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரப் பொறியாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.
