UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 12:14 PM
மாவட்ட தகவலை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், நமது மாவட்டத்தை நாம் அறிவோமே என்ற தலைப்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அரசால் டிவிடி வழங்கப்பட்டு உள்ளது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இணைவிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பொது அறிவு, தனித்திறனை வளர்க்கும் விதமாக ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
தமிழக அரசின் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு மாவட்டம் பற்றி நமது மாவட்டத்தை நாம் அறிவோமே என்ற தலைப்பில் படத்தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் டிவிடி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பி உள்ளது. இதையும் மாணவர்களுக்கு கற்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட முக்கிய தகவல்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு விபரங்கள் அடங்கியுள்ளன.
இதை கண்காணிக்க முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வகுப்புகளில் மாணவர்கள் எதுவும் கற்காமல் வெறுமனே அமர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
