UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM
ADDED : ஜூலை 21, 2011 02:31 PM
திமுக அரசு இந்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த சமச்சீர் கல்வி முறை தரமானதாக இல்லை என்று கூறி புதிய அதிமுக அரசு ரத்து செய்ய சட்டதிருத்த மசோதா நிறைவேற்றியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வியை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்று, கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், ஜுலை 22ம் தேதிக்குள் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேலும், இந்த கல்வியாண்டில் பழைய பாட முறையே தொடர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
