UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM
ADDED : ஜூலை 25, 2011 10:08 AM
விமானத்தில் விமானியாக பறக்க, பலருக்கும் ஆசை இருந்தாலும், அது நிஜத்தில் நடப்பதில்லை. ஆனால் புதுச்சேரி, லாஸ்பேட்டை என்.சி.சி., விமானப் படை பிரிவு, பள்ளி மாணவர்களின் விமானி கனவை, நனவாக்கி வருகிறது.
இதற்கான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் வீரமாமுனிவர், பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
என்.சி.சி., விமானப் படைக்கு சொந்தமான மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் மூலமாக, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 85 குதிரைத் திறன் இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த சிறிய ரக விமானம், 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 80 மைல் வேகத்தில் வானில் பயணம் செய்யலாம்.
இருப்பினும், மாணவர்களின் பயிற்சிக்காக 2,500 அடி உயரத்தில் பறந்தபடியே பயிற்சி அளிக்கப்பட்டது. விங் கமாண்டர் துக்னைட் பயிற்சியளிக்க, தரையில் இருந்த மாணவர்களுக்கு ஏர் கிராப்ட் பயிற்சியாளர்கள் சிங், திலீப், பண்டிட், என்.சி.சி., அதிகாரி சேவியர் விமான பயிற்சி நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர்.
விமானத்தில் முதன்முதலாக பறந்த வீரமாமுனிவர் பள்ளி மாணவன் நவீன் கூறுகையில், "இதுவரை விமானத்தில் பறந்தது கிடையாது. விமானம் மேலெழும்பிய போது சற்று பயமாக இருந்தது. அதன் பிறகு பயம் போய்விட்டது. பைலட்டாக மாறுவதே எனது லட்சியம்" என்றார்.
