UPDATED : ஜூலை 25, 2011 12:00 AM
ADDED : ஜூலை 25, 2011 10:23 AM
சர்வதேச மாணவர் அமைப்பான ஐசெக்(ஏ.ஐ.இ.எஸ்.இ.சி.,) சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், ஆதரவற்ற குழந்தைகளுக்கான பொழுது போக்கு விழா நடந்தது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு, பால கலாகார் - 2011 என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இதில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஆதரவற்றோர் பள்ளி மற்றும் தொண்டு நிறுவனப் பள்ளி, சிறப்புக் குழந்தைகள் பள்ளிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், ஓவியம், நடனப் போட்டிகள் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்நிகழ்ச்சியை சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி துவக்கி வைத்தார். ஐசெக் அமைப்பின் சென்னை பிரிவு துணைத் தலைவர் ஸ்வேதா விஸ்வநாதன் பேசும்போது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமைதி ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஐசெக் மாணவர்கள் அமைப்பு. இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதும் 110 நாடுகளில் கிளைகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் திறமைகள் இருக்கின்றன. ஆனால் பலருக்குத் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தான் எங்கள் அமைப்பின் சார்பில் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமின்றி பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன" என்றார்.
இந்நிகழ்ச்சியில் யுனிசெப் அமைப்பின் மாவட்ட அதிகாரி ஜெய்சங்கர், ஐசெக் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் திவாகர் ராஜூ மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, மாலையில் நடந்த விழாவில் பரிசளிக்கப்பட்டது.
