UPDATED : ஜூலை 27, 2011 12:00 AM
ADDED : ஜூலை 27, 2011 10:08 AM
தமிழகத்தில் பள்ளி பருவத்திலே மாணவிகள் ஏதாவது தொழில் திறனை கற்றுக் கொண்டால் அவர்கள் எதிர்கால வேலைவாய்ப்புக்கு அது உறுதியாக இருக்கும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் கருதியது.
இதனால் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு இது சம்பந்தமான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து அதற்கான உதவிகளை வழங்க முடிவு செய்து புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டக் கூறுகளில் புதிய அணுகுமுறையிலான கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவிகளை இடைநிறுத்தமின்றி தக்க வைக்கவும், 100 சதவீத சேர்க்கை விகிதம் அடையவும் பயனுள்ள செயல்பாடுகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 72 நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவிகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு பள்ளிக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு மாவட்டத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு பள்ளிகளை தேர்வு செய்யும் போது மாணவிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள பள்ளிகள், கிராமப்புற பள்ளிகள், சுற்றுச்சூழல் வைப்பு நிதியுள்ள நடுநிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும், நடுநிலைப் பள்ளிகளில் குறைந்தது 35 முதல் 40 மாணவிகள் உள்ள பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு மாதத்திற்கு 2 ஆயிரம் சம்பளத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவிகளுக்கு பல தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 72 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த பயிற்சி துவங்குவதை ஒட்டி பகுதி நேர ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பகவதி உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர்புற வட்டார வள மையத்தில் நேற்று பயிற்சி நடந்தது.
72 பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தேவபிரபு, செந்தில்குமார் முன்னிலையில் சிறப்பு பயிற்றுநர்கள் தையல், ஜூவல்லரி, கூடைபின்னுதல், பிளவர் வாஷ் தயாரித்தல், பினாயில் மேக்கிங், சாம்ராணி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் மேட் தயாரித்தல், நெட் தயாரித்தல், நாப்கீன் தயாரித்தல் உள்ளிட்ட எண்ணற்ற பயிற்சிகளும் இதன் மூலம் மாணவிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஒரு வட்டாரத்திற்கு 5 முதல் 6 பள்ளிகள் வரும் வரை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
