கல்விக்கடன் வழங்குவதில் குறைபாடு; இழப்பீடு வழங்க உத்தரவு
கல்விக்கடன் வழங்குவதில் குறைபாடு; இழப்பீடு வழங்க உத்தரவு
UPDATED : செப் 12, 2015 12:00 AM
ADDED : செப் 12, 2015 10:51 AM
தஞ்சாவூர்
: தஞ்சாவூரில், மாணவிக்கு கல்விக்கடன் வழங்கியதில் ஏற்பட்ட சேவை குறைபாட்டினால்,
மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, வங்கிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தஞ்சை, அருளானந்த நகரை சேர்ந்தவர் லாரன்ஸ்ரபேல். இவருடைய மகள் கேத்ரின் இசபெல் ரபேலின். இவரை, செவிலியர் படிப்பு படிக்க வைப்பதற்காக, கல்விக்கடன் கேட்டு, தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை, லாரன்ஸ்ரபேல் அணுகினார். அப்போது, கல்விக்கடன் தர ஒப்புக்கொண்டு, கடந்த, 2004, செப்டம்பரில், முதல் தவணையாக, 39 ஆயிரத்து, 250 ரூபாயும், இரணடாம் தவணையாக, 39 ஆயிரத்து, 250 ரூபாயும், கடந்த, 2005 ஜூலை வரை, வங்கி நிர்வாகத்தினர் கொடுத்தனர். தொடர்ந்து, மூன்றாவது தவணையை வங்கி வழங்கவில்லை.
ஆனால், வழங்கி விட்டதாக கூறி, அந்த தொகைக்கும் சேர்த்து வட்டி செலுத்த, வங்கி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், பணம் வாங்காமல் வட்டி செலுத்த, லாரன்ஸ்ரபேல் மறுத்துவிட்டார். இதையடுத்து, பள்ளி ஆசிரியையாக பணியாற்றும், அவருடைய மனைவிக்கு வட்டியை செலுத்த, வங்கி நிர்வாகம் நிர்பந்தம் செய்துள்ளது. இதனால், வட்டி தொகையை லாரன்ஸ்ரபேல் செலுத்தினார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான லாரன்ஸ்ரபேல், இதுகுறித்து, தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். வழக்கை குறைதீர் மன்ற தலைவர் ராஜகோபால் மற்றும் உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர்.
அதில், வங்கி தரப்பில், மூன்றாவது தவணை கொடுக்காமலேயே, கொடுத்ததாக கூறப்பட்ட விஷயங்கள், ஆவணங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம், குறைதீர்மன்ற தலைவர் ராஜகோபால் மற்றும் உறுப்பினர்கள், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை கூறினர்.
