அரசு உதவி பெறும் பள்ளிகளில் முறைகேடு; கல்வித்துறை அதிர்ச்சி
அரசு உதவி பெறும் பள்ளிகளில் முறைகேடு; கல்வித்துறை அதிர்ச்சி
UPDATED : செப் 21, 2015 12:00 AM
ADDED : செப் 21, 2015 11:01 AM
திருப்பூர்
: அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
ஆசிரியர் பணியிடம் தொடர்பாக முறைகேடு நடப்பதாக
எழுந்துள்ள புகாரால், கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாதபோதும், கூடுதல் பணியிடம் உருவாக்கி, பள்ளி நிர்வாகங்கள் முறைகேடு செய்வதாக, கல்வித்துறைக்கு புகார் வந்தது. அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், இது உண்மை என தெரியவந்தது. அதிக மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி, கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது; அலுவலக பணிகளில், குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை நியமித்து, ஆசிரியர்களுக்கான சம்பளத்தை பெற்று, நிதியை அபகரிப்பது போன்ற குளறுபடிகளை, சில பள்ளி நிர்வாகங்கள் செய்திருப்பது தெரியவந்தது.
இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் சிலர், உடந்தையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதில் அரசு ஊதியம் பெறுவோர் விவரம், பணி நியமனம் செய்யப்பட்டது எப்போது, அனுமதி எண், அனுமதி பெற்றபோது, பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை, தற்போதைய எண்ணிக்கை, ஆசிரியர் பணி நியமனத்துக்கான அரசு உத்தரவு ஒரிஜினல் சான்று ஆகியவற்றை, சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
