கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து: இ.சி.ஆர்., சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து: இ.சி.ஆர்., சாலையில் போக்குவரத்து பாதிப்பு
UPDATED : மே 10, 2026 09:42 PM
ADDED : மே 10, 2026 09:21 PM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே இ.சி.ஆர். சாலையில், திடீரென சாலையின் குறுக்கில் திரும்பிய கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். நடுரோட்டில் கார் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் குர்லா ஷியாம் மோகன் மகன் சாய் தோஜா, 29; இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் (மே 9) புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். (மே 10) காலை 11:00 மணிக்கு இ.சி.ஆர்., சாலையில் (டி.ஜி.09.9498) என்ற பதிவெண் கொண்ட பொலிரோ காரில் காலாப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சாய் தோஜா ஓட்டிச்சென்றார்.
இ.சி.ஆர் சாலையில், பொம்மையார்பாளையம் சித்தர்சிவஞானி தனியார் கலைக்கல்லுாரி சந்திப்பில் சென்றபோது, ஆரோ பீச்சுக்கு செல்வதற்காக சாய் தோஜா, காரை வலதுபுறமாக திரும்பினார். அப்போது, காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த (பி.ஒய்.01.டி.எப்.4536) என்ற பதிவெண் கொண்ட பிரிசா கார், திடீரென சாலையில் திரும்பிய பொலிரோ கார் மீது மோதியது. இந்த விபத்தில், நடுரோட்டில் பொலிரோ கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பொலிரோ காரில் இருந்த ஓட்டுநர் உட்பட 6 பேரும், பிரிசா காரில் வந்த காலாப்பட்டு பகுதியை சேர்ந்த மூவர் என மொத்தம் 9 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெரிசலில் சிக்கிய வாகனங்களை எதிர் திசையில் மாற்றி அனுப்பினர்.
தெலுங்கானாவில் இருந்து சுற்றுலா வந்த கார் திடீரென சாலையில் திரும்பியதால், மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
