ADDED : மே 04, 2026 08:51 PM
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி 37வது ஓட்டுச்சாவடியில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால் ஓட்டு எண்ணிக்கை தாமதமானது.
கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் ரமேஷ், தி.மு.க. சார்பில் வடிவேல், சுயேச்சையாக அழகு (எ) அழகானந்தம், த.வெ.க., சார்பில் ஜெயந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில், முதல் சுற்றிலிருந்தே சுயேச்சை வேட்பாளர் அழகு (எ) அழகானந்தம் முன்னிலை வகித்தார். என்.ஆர்.காங்., வேட்பாளர் ரமேஷ் பின் தங்கினார்.
3வது சுற்றில் சுயேச்சை வேட்பாளர் அழகு(எ)அழகானந்தம் 11,940 ஓட்டுகள் பெற்று, 5748 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் நீடித்தார்.
இறுதி சுற்றான 4வது சுற்றில், ஓட்டு எண்ணிக்கை துவங்கியபோது, 37வது ஓட்டுச்சாவடியின் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் சில மணி நேரம் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
