Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் ஸ்கேட்டிங் பயிற்சி ஆபத்தை தேடிச் செல்லும் சிறுவர்களால் திக்... திக்....

புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் ஸ்கேட்டிங் பயிற்சி ஆபத்தை தேடிச் செல்லும் சிறுவர்களால் திக்... திக்....

புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் ஸ்கேட்டிங் பயிற்சி ஆபத்தை தேடிச் செல்லும் சிறுவர்களால் திக்... திக்....

புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் ஸ்கேட்டிங் பயிற்சி ஆபத்தை தேடிச் செல்லும் சிறுவர்களால் திக்... திக்....

ADDED : ஜூன் 09, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
வானுார் : புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், பெற்றோர்களின் அலட்சியத்தால் ஆபத்தை அறியாமல் சிறுவர், சிறுமியர், ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்கேட்டிங் விளையாட்டு மீதான ஆர்வம் மாணவர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல தனியார் பள்ளிகள் மற்றும் பல்வேறு அசோசியேஷன்கள் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகின்றன.

குறிப்பாக தனியார் பள்ளிகளில் பாடத்திட்டம் அல்லாத கூடுதல் பயிற்சியில், ஸ்கேட்டிங் இடம் பெற்றுள்ளது. உடலைப் புத்துணர்வுடன், வைத்து கொள்வதற்கும், மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தடுப்பது, நினைவாற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை வளர்க்க இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறது.

இதனால், பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்க விரும்புகின்றனர். இதன் காரணமாக, தற்போது பரவலாக ஏராளமான ஸ்கேட்டிங் பயிற்சி மையங்கள் வந்து விட்டன. பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக பயிற்சிக்கு ஏற்ப ரோலர் ஷூக்கள், கீழே தவறி விழுந்தாலும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க முழங்கால், முழங்கைக்கு உறை, பிரத்யேக தலைக்கவசம் அணிந்து பயிற்சி செய்ய வேண்டும். இந்த பயிற்சிக்கு தகுந்தாற்போல், உரிய செயற்கைத் தளங்கள் தேர்வு செய்யப்படுகிறது.

இதற்கு தகுந்த வசதிகள் இல்லையென்றால், சிமென்ட் தளங்கள், கூடைப்பந்து மைதானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சில மையங்கள் மட்டும் தங்களுக்கென பயிற்சித் தளங்களை வைத்திருக்கின்றனர். பல அசோசியேஷன்கள் பயிற்சி தளங்கள் இல்லாததால், சாலைகளை பயன்படுத்துகின்றன.

இதே போன்று புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி, பிரத்தியங்கிரா காளிக்கோவில், சந்திப்பில் உள்ள சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கு பயிற்சி எடுக்கும் சிறுவர், சிறுமியர் மொரட்டாண்டி டோல்கேட்டில் துவங்கி, புளிச்சப்பள்ளம், ஒழிந்தியாப்பட்டு, தைலாபுரம் வரை நீண்ட துாரத்திற்கு காலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதும், அவர்களை பின்தொடர்ந்து, பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

இந்த நேரத்தில் தான் சரக்கு வாகனங்கள் அதகளவு செல்வதால், விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவதாகவே உள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங்கில் வரிசையாக செல்லும் போது, யாரேனும் ஒருவர் தவறினாலும் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

புறவழிச்சாலையில், ஸ்கேட்டிங் பயிற்சி செய்வோருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கி, பயிற்சித் தளத்தில் பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us