ADDED : ஜூன் 10, 2026 04:41 AM
புதுச்சேரி: சட்ட விதி மீறலை, மீறி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனருக்கு ஆதரவாக வையாபுரி மணிகண்டன் எம். எல். ஏ., பேசியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள கே.பி.எஸ்.திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சார ஒயர் அருகில் மிக நெருக்கமாக, விபத்து ஏற்படும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. போலீஸ், பொதுப்பணி, மின்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி கட்டப்பட்டிருந்த இந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றாததால், மின் துறையினர் மண்டபத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் மண்டபம் ஊழியர்களும் மின்துறைக்கு ஆதரவாக ஜெனரேட்டரை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். திருமண விழாவிற்கு வந்த வையாபுரி மணிகண்டன் எம். எல். ஏ., தனது ஆதரவாளர் இல்ல திருமணத்தில் மின் இணைப்பை துண்டித்ததை, கண்டித்து மின்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்ட விரோத பேனருக்கு ஆதரவாக வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., பேசியது திருமணத்திற்கு வந்த பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டவிரோத பேனருக்காக எம்.எல்.ஏ., ஒருவர் வாதிடலாமா. மக்கள் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வுக்கு இது அழகா என்று பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இது போன்ற விதிமீறல் பிரச்னைகளில், எம்.எல்.ஏ., க்கள் தலையிடுவதால் தான், புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை கூட பலர் மதிக்காமல் செல்கின்றனர்.
மக்களின் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சட்ட விரோத செயல்களின் ஈடுபடுவோரை கண்டிக்காமல், ஆதரிப்பதால் தான் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.





