Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கண்டமங்கலம் புதிய மாற்றுப்பாதையில் இடையூறு! ரயில்வே கேட் மூடுவதற்குள் சரிசெய்ய வேண்டும்

கண்டமங்கலம் புதிய மாற்றுப்பாதையில் இடையூறு! ரயில்வே கேட் மூடுவதற்குள் சரிசெய்ய வேண்டும்

கண்டமங்கலம் புதிய மாற்றுப்பாதையில் இடையூறு! ரயில்வே கேட் மூடுவதற்குள் சரிசெய்ய வேண்டும்

கண்டமங்கலம் புதிய மாற்றுப்பாதையில் இடையூறு! ரயில்வே கேட் மூடுவதற்குள் சரிசெய்ய வேண்டும்

ADDED : ஜன 15, 2024 06:51 AM


Google News
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துார நெடுஞ்சாலை 45 ஏ, நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ. 6,431 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு பணிகள் துவங்கியது.

விழுப்புரம் ஜானகிபுரம் துவங்கி எம்.என்.குப்பம் - கடலுார் சிப்காட் காரைக்காடு - சிதம்பரம் - சட்டநாதபுரம் வழியாக நாகப்பட்டினம் வரை நான்குவழி கான்கிரீட் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதில் ஜானகிபுரம் துவங்கி எம்.என்.குப்பம் வரையிலானமுதல் பிரிவு பணியில், 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

கண்டமங்கலம் ரயில்வே பாதை மீது பாலம் அமைக்கும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது.

ரயில்வே மேம்பாலத்தின்கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இணைப்பு பாதை தயாராகி விட்டது.

ரயில்பாதைக்கு மேல் கட்டப்படும் பாலம், ரயில்வே துறையின் கட்டுமான விதிகளின்படி கட்டப்பட வேண்டும். அதற்கான அனுமதி பெற தாமதம் ஏற்பட்டது.ரயில்வே துறையின் ஒப்புதல் பெற்று தற்போது பணிகள் துவங்கி உள்ளது. ரயில்பாதையின் மேல் பகுதியில், அரை கோள வடிவில் 'பவுஸ்டிங் கர்டர்' முறையில் முழுக்க முழுக்க இரும்பு கர்டர்களால் பாலம் அமைக்கப்படுகிறது.

ரயில் மேம்பாலம் பணி துவங்கினால், கண்டமங்கலம் ரயில்வே கேட் முழுமையாக மூடப்படும். இதனால் புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள் அரியூரில் இடதுபுறம் திரும்பி, சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு, திருபுவனை செல்ல வேண்டும்.

விழுப்புரத்தில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மதகடிப்பட்டில் இடதுபுறம் திரும்பி கலிதீர்த்தாள்குப்பம், பி.எஸ்.பாளையம், வாதானுார், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துக்கன்னு, வில்லியனுார் வழியாக செல்ல வேண்டும். கார் உள்ளிட்டஇலகு ரக வாகனங்கள் திருவண்டார்கோவில் இடது புறம் திரும்பி கொத்தபுரிநத்தம், வனத்தாம்பாளையம், சின்னபாபுசமுத்திரம், பங்கூர் வழியாக செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கண்டமங்கலம் ரயில்வே கேட் பாதை மூடும் பணி இதுவரை இறுதி செய்து அறிவிக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏராளமான இடையூறுகள் உள்ளது.அரியூர் சர்வீஸ் சாலையில் இருந்து சிவராந்தகம் செல்லும் சந்திப்பில், மின் கம்பங்கள் இடையூறாக உள்ளது.

சிவராந்தகத்தில் இருந்து கீழூர், மண்டகப்பட்டு, திருபுவனைக்கு செல்லும் கடலுார் சாலையில் சரியான மின் விளக்குகள் இல்லை. சாலையும் குறுகலாக உள்ளதால், எதிர் திசையில் வரும் வாகனங்களால் போக்குவரத்து சிக்கல் ஏற்படும்.மதகடிப்பட்டில் இருந்து கலிதீர்த்தாள்குப்பம் திரும்பும் பகுதியில் சாலை பகுதி குறுகலாக உள்ளது.

திருவண்டார்கோவில் கொத்தபுரிநத்தம், வனத்தாம்பாளையம், சின்னபாபுசமுத்திரம், பங்கூர் வரை செல்லும் பாதை 20 அடி அகல சாலையாக உள்ளது.

இச்சாலையில் பஸ்கள் செல்லும்போது எதிரில் வரும் வாகனத்தால் பஸ்கள் கடந்து செல்ல முடியாது.

மேலும், இப்பாதையில் மின் விளக்குகளும் இல்லை. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, மாற்றுப்பாதையில் வாகன ஓட்டிகளுக்கு உள்ளஇடையூறுகளை சரிசெய்த பின்பு கண்டமங்கலம் ரயில்பாதையை மூடி பணிகள் துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us