ADDED : மே 02, 2026 01:37 AM
புதுச்சேரி: சாராயக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏம்பலம், புதுகுப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 45. இவர், கணுவாப்பேட்டை சாராயக்கடையில் வேலை செய்தார். கடந்த 29ம் தேதி இரவு வீட்டிற்கு தனது நண்பருடன் வந்தார். அவரிடம் பைக் எங்கே என அவரது மனைவி நதியா கேட்டார்.
அதற்கு அவர், கடையில் கல்லா போடும் போது பணம் மிஸ் ஆகிவிட்டது. பணத்தை கொடுத்தால் தான் பைக்கை தருவார்கள் என, கூறினார். மறுநாள் காலை நதியாவும் அவரது மகன் சரணும் கணுவாப்பேட்டை சாராயக்கடைக்கு சென்று ரூ.1840 ஜி.பே., மூலம் செலுத்தி பைக்கை எடுத்து வந்தனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஏழுமலை வீட்டின் குளியல் அறையில் துாக்கில் தொங்கினார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள், ஏழுமலையை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தார். புகாரின்பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
