ADDED : செப் 21, 2025 11:12 PM

புதுச்சேரி: பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி, பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், கிழக்கு எஸ்.பி., ஸ்ருதி ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதேபோல், கிருமாம்பாக்கத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், தெற்கு எஸ்.பி.,செல்வம், சேதராப்பட்டில் வடக்கு எஸ்.பி., ரகுநாயகம், திருபுவனையில் எஸ்.பி., சுப்ரமணியன், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி., ரச்சனா சிங் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.
இதில், பொது மக்களிடம் இருந்து 78 புகார்கள் பெறப்பட்டு, 63 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு, எஸ்.பி.,க்கள் உத்தரவிட்டனர்.