Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மஞ்சள் ரேஷன் கார்டிற்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மஞ்சள் ரேஷன் கார்டிற்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மஞ்சள் ரேஷன் கார்டிற்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மஞ்சள் ரேஷன் கார்டிற்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

ADDED : மார் 20, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: மஞ்சள் ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;

பட்ஜெட்டை அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பாராட்டியிருப்பதிற்கு நன்றி. பட்ஜெட்டில் கூறியதை நிறைவேற்ற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர். நிச்சயமாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வருவாயை கூட்ட வரி விதிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர். மக்களை பாதிக்காத வகையில் வரி போடலாம். எந்த வகையில் வருவாயை கூட்ட முடியுமோ அந்த வழியில் வருமானத்தை கூட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது ஒன்றிரண்டு தான் விடுபட்டிருக்கும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற பாகுபாடு இன்றி, எல்லா தொகுதியும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம்.

உள்ளாட்சி துறை மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கான நிதி கடந்த காலத்தில் ரூ.10, ரூ. 20 லட்சம் கிடைத்தது.

தற்போது 2 கோடி என, முடிவு செய்துள்ளோம். மேம்பாட்டு நிதியை ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தியதால், கொடுப்பார்களா என சந்தேகம். எம்.எல்.ஏ.,க்கள் மேம்பாட்டு நிதி முழுதும் ஒதுக்கி தரப்படும்.

தென்னை விவசாயிகள் பயன்பெற காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி கல்வியில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். உயர்கல்வியில் ஸ்காலர்ஷிப் பணம் கொடுப்பதில், கால தாமதம் ஏற்பட்டது. ஆனால், நிதியை கொடுத்து வருகிறோம். விடுபட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் லேப்டாப் வழங்கப்படும்.

சேதராப்பட்டு நிலத்தை கையகப்படுத்தி சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அங்கு தொழிற்பேட்டை முழுமையாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'ஐடி' பார்க் கொண்டு வர நிலம் கேட்டுள்ளனர். தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் வழங்கும் அரிசியுடன் கூடுதலாக கோதுமை வழங்கப்படும். சிவப்பு ரேஷன் கார்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்ஜெட்டில் ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித்தொகை கொடுக்க கோரிக்கை விடுத்தனர்.

சிவப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ அரிசி வழங்குவதுபோல், எவ்வித உதவித்தொகை பெறாத மஞ்சள் ரேஷன் கார்டு குடும்ப தலைவிக்கு, மாதம், ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும்.

மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு ரூ. 400 கோடி செலவாகும். அதற்கான வருவாயை அரசு உயர்த்தும்.

தேர்தலை நோக்கிய பட்ஜெட் என விமர்சனம் செய்துள்ளனர். எப்படியாக இருந்தாலும், புதுச்சேரி வளர்ச்சி நோக்கிய பட்ஜெட்டாக இது இருக்கும். நல்ல கல்வி, நல்ல மருத்துவ வசதி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து பிராந்திய அரசு மருத்துவமனைகளிலும் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட இயந்திரங்களும் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு, நலத்திட்ட மேம்பாடு என ஒட்டுமொத்த வளர்ச்சி அரசின் எண்ணம்.

கல்வித்துறையில் பணியாற்றும் ரொட்டிப்பால் ஊழியர்களை எம்.டி.எஸ்., மாதிரி முழு நேர பணியாளராக மாற்றி ரூ 18 ஆயிரம் ஊதியம் வழங்குவதற்கான கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். பி.ஆர்.டி.சி.,யில் புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளது. பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்தால் வருவாய் உயரும்.

அதன்மூலம் ஒப்பந்த டிரைவர், கண்டெக்டர்களுக்கு அந்நிறுவனமே சம்பளம் உயர்த்தி வழங்கும். சுகாதார இயக்கத்தில் சில பிரிவில் மட்டும் சம வேலைக்கு, சம ஊதியம் இல்லாமல் உள்ளது. அதனையும் சரி செய்து கொடுப்போம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us