Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எப்.ஐ.ஆர்., தமிழில் பதிவு செய்ய மத்திய அமைச்சர் உத்தரவு

எப்.ஐ.ஆர்., தமிழில் பதிவு செய்ய மத்திய அமைச்சர் உத்தரவு

எப்.ஐ.ஆர்., தமிழில் பதிவு செய்ய மத்திய அமைச்சர் உத்தரவு

எப்.ஐ.ஆர்., தமிழில் பதிவு செய்ய மத்திய அமைச்சர் உத்தரவு

ADDED : மே 15, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். தமிழில் பதிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்க மறு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், 'பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த சட்டங்களின் செயல்பாடுகளை உறுதிப்படுத்த தலைமை செயலர், டி.ஜி.பி., வாரம் ஒருமுறையும், உள்துறை அமைச்சர் 15 நாட்களுக்கு ஒருமுறையும், கவர்னர் மாதத்திற்கு ஒருமுறையும் ஆய்வு செய்ய வேண்டும்.

கைது செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் கை ரேகைகளும், தேசிய தரவின் கீழ் (என்.ஏ.எப்.ஐ.எஸ்) பதிவு செய்யப்பட வேண்டும். இதனால், தரவு தளத்தை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். இ-சம்மன், இ- சாக்ஷா நியாய ஷ்ருதி, தடயவியல் போன்ற விதிகள் விரைவில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) தமிழ்மொழியில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். அது தேவைப்படுபவர்களுக்கு பிற மொழிகளில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us