ADDED : செப் 23, 2025 11:40 PM
திருக்கனுார் : சுத்துக்கேணியில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சுத்துக்கேணி, செங்கமேடு செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலம் அருகே வாலிபர் ஒருவர், கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்து அவரை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சுத்துக்கேணி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பூபாலன் மகன் சாரதி, 22; என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 34 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.