Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெருங்களத்துாரில் இரட்டை கொலை 3 பேர் கைது; இன்ஸ்., இடமாற்றம்

பெருங்களத்துாரில் இரட்டை கொலை 3 பேர் கைது; இன்ஸ்., இடமாற்றம்

பெருங்களத்துாரில் இரட்டை கொலை 3 பேர் கைது; இன்ஸ்., இடமாற்றம்

பெருங்களத்துாரில் இரட்டை கொலை 3 பேர் கைது; இன்ஸ்., இடமாற்றம்

ADDED : ஜூலை 04, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
தாம்பரம்:கஞ்சா விற்பனை மோதலில் பெருங்களத்துார் அருகே இருவரை ஆட்டோவில் கடத்தி கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுபெருங்களத்துார், குண்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர், சோனு என்கிற கோபாலகிருஷ்ணன், 24. சோனு, போதை ஊசி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

புதுபெருங்களத்துாரைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை, 22, ஜில்லா என்கிற தமிழரசன், 22. இவர்கள் இருவரும், போதைப் பொருள் விற்பனை செய்து வந்த சோனுவை மிரட்டி, பணம் வாங்கி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை சோனு நிறுத்தியுள்ளார்.

ஆனாலும், தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பது, அவர் வீட்டிற்குள் புகுந்து போதை பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற செயல்களில் அண்ணாமலை, தமிழரசன் ஆகியோர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1ம் தேதியும் வீடு புகுந்து ரகளை செய்துள்ளனர். அப்போது, சோனுவிடம் அவரது மனைவி குறித்தே ஆபாசமாக பேசி சென்றனர்.

இதில் ஆத்திரமடைந்த சோனு தன்னை தொடர்ந்து மிரட்டி வரும் இருவரையும் பழிதீர்க்க முடிவு செய்தார். தன் நண்பர்கள் புதுபெருங்களத்துாரைச் சேர்ந்த ஆரிப், 25, மதுரையைச் சேர்ந்த விஜய்,23 ஆகியோருடன் சேர்ந்து, நள்ளிரவில் இருவரையும் தேடி ஆட்டோவில் சென்றுள்ளார்.

அண்ணாமலை, தமிழரசன் இருவரையும் ஆட்டோவில் கடத்தி, இரும்புக் கம்பியால் தாக்கி, கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து, இதில் தொடர்புடைய ஆகிய மூவரை, நேற்று முன்தினம் செங்கல்பட்டில் கைது செய்தனர்.

ஆய்வாளர் மாற்றம்


பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கணேஷ் பாண்டியன்.

இவர், பதவியேற்றதில் இருந்து, காவல் நிலைய எல்லையில் போதைப் பொருட்கள் விற்பனை, கஞ்சா கும்பலின் அட்டகாசம் அதிகரித்து, இதுவரை ஐந்து கொலைகள் நடந்து உள்ளன.

ஜன., 31ம் தேதி, காதல் தகராறில் ஜீவா என்ற வாலிபர், பெருங்களத்துார் குண்டுமேடு பகுதியில், தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார்.

மார்ச் 3ம் தேதி, சுமேஷ் என்பவர், நண்பருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஜூன் மாதம், முடிச்சூரில் இரு கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதலில், விக்னேஷ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தற்போது, போதைப் பொருள் விற்பனை முன்விரோதத்தில், இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்களை தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டியதற்காக, ஆய்வாளர் கணேஷ் பாண்டியன், இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதில், சேலையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜீ, பீர்க்கன்காரணை சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us