Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அட்டவணைப்படி இயங்காத மின்சார ரயில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கடும் நெரிசல்

அட்டவணைப்படி இயங்காத மின்சார ரயில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கடும் நெரிசல்

அட்டவணைப்படி இயங்காத மின்சார ரயில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கடும் நெரிசல்

அட்டவணைப்படி இயங்காத மின்சார ரயில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கடும் நெரிசல்

ADDED : ஜூலை 13, 2024 04:15 PM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை புறநகரில் 'பீக் ஹவர்'களில், அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்காததால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

ஆனாலும், 'பீக் ஹவர்' எனப்படும் அலுவலக நேரங்களில், அட்டவணைப்படி சரியான இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. அதிக இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசலில் பயணியர் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:

செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்களில் காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது. ஆனால், போதிய அளவில் ரயில்கள் இல்லாததால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி, அவதிப்படுகின்றனர். அதுபோல், இரவு 8:30 மணிக்கு மேல், மின்சார ரயில்களின் சேவை குறைத்து இயக்கப்படுகிறது.

கடற்கரை - தாம்பரம் தடத்தில் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. புறநகரில் பாஸ்ட் மின்சார ரயில்களை இயக்கினால், தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் பயணியர் விரைவாக செல்ல முடியும். வழக்கமாக செல்லும் மின்சார ரயில்களில் நெரிசலும் குறையும்.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவது புதிய பாதையில் ரயில் சேவை துவக்கப்பட்டாலும், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து சென்னை ரயில் கோட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பயணியரின் தேவைக்கு ஏற்ப, மின்சார ரயில்கள் இயக்கி வருகிறோம். இருப்பினும், பயணியரின் புகார் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

பாக்ஸ்:

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு; சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம், சென்ட்ரல் - திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி தடத்தில், 'பீக் ஹவர்' எனப்படும் அலுவலக நேரங்களில், காலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை, ஐந்து நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் சர்வீஸ் இயக்கப்பட வேணடும். மற்ற நேரங்களில் 40 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் சர்வீஸ் இயக்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் படி, காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பீக் ஹவர்களில், பெரும்பாலான நேரங்களில், ஐந்து நிமிடத்துக்கு ஒரு சர்வீஸ் இயக்குவதில்லை என பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us