Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நெடுங்குன்றம் ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

நெடுங்குன்றம் ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

நெடுங்குன்றம் ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

நெடுங்குன்றம் ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

ADDED : ஜூன் 13, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில், தி.மு.க., 12, பா.ஜ., 1, நாம் தமிழர்கட்சி 1, அ.ம.மு.க., 1, என, மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், தி.மு.க.,வை சேர்ந்த வனிதா என்பவர், ஊராட்சி தலைவியாகஉள்ளார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக, தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர்கள், நேற்று ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே, நெடுங்குன்றம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, தலைவருக்கு எதிராக கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்து, ஊராட்சி தலைவி மீது இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி,தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான புகாரின்பேரில், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தினார்.

அப்போது, உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவது குறித்தான கடிதத்தை, அவர் பெற்றுக்கொண்டார்.

மேலும், கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து, ஊராட்சி தலைவி வனிதா கூறியதாவது:

ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் அனைத்து பணிகளும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, முறையாக செயல்படுத்தப்படுகிறது. இதில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவே, இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக, கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விபரம் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us