Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சரக்கு வாகனத்தில் மாடு திருடிய கும்பல் ஒருவர் சிக்கினார்; ஐவருக்கு வலைவீச்சு; மடக்க முயன்ற போலீசாரை தாக்கி அட்டூழியம்

சரக்கு வாகனத்தில் மாடு திருடிய கும்பல் ஒருவர் சிக்கினார்; ஐவருக்கு வலைவீச்சு; மடக்க முயன்ற போலீசாரை தாக்கி அட்டூழியம்

சரக்கு வாகனத்தில் மாடு திருடிய கும்பல் ஒருவர் சிக்கினார்; ஐவருக்கு வலைவீச்சு; மடக்க முயன்ற போலீசாரை தாக்கி அட்டூழியம்

சரக்கு வாகனத்தில் மாடு திருடிய கும்பல் ஒருவர் சிக்கினார்; ஐவருக்கு வலைவீச்சு; மடக்க முயன்ற போலீசாரை தாக்கி அட்டூழியம்

ADDED : அக் 06, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்,:மறைமலை நகர் அண்ணா சாலையில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை நோக்கி, நேற்று அதிகாலை 2:45 மணியளவில், 'பொலீரோ' சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது.

ரோந்து பணியில் இருந்த மறைமலை நகர் போலீசார் நிறுத்த முயன்ற போது, சரக்கு வாகனம் நிற்காமல் சென்றது.

போலீசார் துரத்திச் சென்ற போது, சரக்கு வாகனத்தை ஓட்டிய நபர், சாலையில் சென்ற ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.

பின், சரக்கு வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உட்பட ஆறு பேர் தப்பிச் சென்றனர்.

இது குறித்து, இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த ஆறு மாடுகள் மீட்கப்பட்டன. இதில் ஒரு பசு பலத்த காயமடைந்து இருந்தது.

இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளித்து, மறைமலை நகர் அடுத்த ரயில் நகர் பகுதியை சேர்ந்த உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையில், மறைமலை நகர் -- ஆப்பூர் சாலையில் ரோந்து பணியில் இருந்த மறைமலை நகர் குற்றப் பிரிவு போலீஸ்காரர்கள் விக்னேஷ் மற்றும் பிரபு இருவரும், அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த மூவரை மடக்க முயன்றனர்.

அவர்கள் நிற்காமல் சென்றதால், 6 கி.மீ., துாரம் துரத்திச் சென்று, ஆப்பூர் டேங்க் பகுதியில், அவர்கள் சென்ற பைக்கை குறுக்கே நிறுத்தி, மர்ம நபர்கள் வந்த 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கை நிறுத்த முயன்றனர்.

ஆனாலும் அவர்கள், போலீசாரின் பைக் மீது தங்களின் பைக்கை மோதியுள்ளனர்.

இதில், போலீஸ்காரர்கள் இருவரும் கீழே விழுந்ததில், இருவருக்கும் காலில் அடிபட்டது. இருந்தும், மூவரில் ஒருவரை அவர்கள் மடக்கிப் பிடித்த போது, மர்ம நபர்கள் இரும்பு ராடால் போலீசாரை தாக்க முயன்றனர்.

அப்போது பொதுமக்கள் ஓடி வந்ததால், இருவர் தப்பிச் சென்றனர்.

பிடிபட்ட நபரை மறைமலை நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த காமர் அலி, 30, என தெரிந்தது.

இவர், தன் கூட்டாளிகளுடன் இணைந்து மறைமலை நகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த மூன்று ஆண்டுகளாக, சாலையில் திரியும் மாடுகளை திருடி கன்டெய்னர் மற்றும் சரக்கு வாகனங்களில் இறைச்சிக்காக கடத்தி சென்றது தெரிந்தது.

அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான மாடுகள் கடத்தப்பட்டது தெரிந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வரும் போலீசார், தப்பிச் சென்ற மற்ற ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.

இறைச்சிக்காக கடத்தல் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் காயரம்மேடு, சிங்கபெருமாள் கோவில், கொண்டமங்கலம், கருநிலம், கொளத்துார், பேரமனுார், வில்லியம்பாக்கம், பாலுார், மறைமலை நகர் உள்ளிட்ட கிராமங்களில், கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை மலைகள் மற்றும் அறுவடை முடிந்த வயல்களுக்கு ஓட்டி செல்லும் போது நோட்டமிடும் மர்ம நபர்கள், இரவு நேரங்களில் அவை அடைக்கப்படும் இடங்களுக்குச் சென்று, சரக்கு வாகனங்களில் திருடிச் செல்கின்றனர். ஆடு, மாடுகள் திருடப்படுவது குறித்து, எந்த காவல் நிலையத்திலும் பெரும்பாலும் புகார் பெற்று வழக்கு பதிவு செய்வது இல்லை என, மாடு வளர்ப்போர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இரு மாதங்களுக்கு முன், கருநிலம் கிராமத்தில் மாடு திருடப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில், நான்கு மாடுகள் திருடப்பட்டுள்ளன. கடந்த மாதம் செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், சாலையில் படுத்திருந்த மாடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டன. பெரும்பாலான மாடுகள் இறைச்சிக்காக திருடப்பட்டு, சுற்றியுள்ள காப்புக்காடுகளில் வைத்து வெட்டப்பட்டு, இறைச்சியாக விற்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.



தப்பிச்செல்ல பைக் ஆட்டை மாடுகள் கடத்திய சரக்கு வாகனம் விபத்தில் சிக்கிய பின், ஆறு பேரும் தப்பிச் சென்றனர். அப்போது, மறைமலை நகர் ரயில் நிலையம் அருகில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கை திருடி, அதில் ஆப்பூர் சாலை வழியாக தப்பிச் சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us