/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதிபோதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி
போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி
போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி
போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி
UPDATED : பிப் 10, 2024 11:23 PM
ADDED : பிப் 10, 2024 10:30 PM

சென்னை:வார இறுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்வோருக்கு போதுமான பேருந்துகள் இல்லாததாலும், கிளாம்பாக்கத்திற்கு இணைப்பு பேருந்துகள் பற்றாக்குறையாலும் இரண்டாவது நாளாக நேற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அவதியடைந்தனர்.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் வர போதிய இணைப்பு பேருந்துகள் இல்லாதது, உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தாதது குறித்து, பயணியர் புலம்பி வருகின்றனர்.
வார இறுதியில் தென்மாவட்ட பயணியர் வசதி கருதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். நேற்று முன்தினம், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல, கிளாம்பாக்கத்திற்கு வந்த பயணியர், போதிய பேருந்துகள் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர். இதனால் அதிருப்தியடைந்த 200க்கும் மேற்பட்ட பயணியர், பேருந்து நிலையத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் திடீரென பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார், பயணியருடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
சொந்த ஊர் செல்ல வந்தோர், போதிய பேருந்துகள் இல்லாததால், பேருந்து நிலைய நடைமேடையில் இரவு முழுதும் உறங்கி, அதிகாலையில் பேருந்து பிடித்து சென்றனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கிளாம்பாக்கத்தில் இருந்து, ஏற்கனவே திட்டமிட்டப்படி அரசு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், மதுராந்தகம் அருகே, நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட விபத்தால் 2 கி.மீ., துாரம் வாகன போக்குவரத்து முடங்கியது.
கிளாம்பாக்கம் வர வேண்டிய பேருந்துகள், அந்த நெரிசலில் சிக்கி, ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன. இதனால், கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 488 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தவிர, தினமும் இயக்கப்படும் 1,161 அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
நேற்று முன்தினம், வார இறுதி நாட்கள் என்பதால், இரவு 10:30 மணிக்கு மேல், அதிகமான பயணியர் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.
அவர்களின் தேவைக்காக, கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்பட்டன. தை அமாவாசையை முன்னிட்டு, மேல்மலையனுார் மற்றும் திருவண்ணாமலைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
எதிர்பார்க்காத வகையில் அதிகளவில் பயணியர் வந்ததால், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், எங்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருக்கைகளை சேதப்படுத்தினர். அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணிபுரிவதற்கு அச்சமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று முன்தினம் நடந்த சம்பவத்திலும் பாடம் கற்காத அதிகாரிகளால், போதிய பேருந்துகள் கிடைக்காமல் நேற்றும் பயணியர் அவதியடைந்தனர்.
குறிப்பாக, திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம், திருச்சி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், 700க்கும் மேற்பட்ட பயணியர் அவதியடைந்தனர். நள்ளிரவு வரை நீண்ட நேரமாக பேருந்துகளுக்காக காத்திருந்தனர். மீண்டும் மறியல் போன்ற போராட்டங்களை தடுக்கும் வகையில், நேற்று 80க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திட்டமிடல் இல்லை
முன்பெல்லாம், மாநகர போக்குவரத்து கழகத்தில் முதல் ஷிப்ட் காலை 4:00 மணிக்கும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 2:00 மணிக்கும் துவங்கும். ஆனால், கிளாம்பாக்கத்தில் தற்போது நிலவி வரும் பயணியர் புகாரால், அதிகாலை 3:00 மணி முதலே மாநகர பேருந்துகளின் சேவை துவங்கப்படுகிறது. இதனால், ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை ஏற்படுகிறது.கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கென திறக்கப்பட்ட பிரத்யேக ஓய்வு அறைகள், சில நாட்களாக, முன்னறிவிப்பு இன்றி மூடியுள்ளனர். வேறுவழியின்றி பேருந்துகளின் இருக்கைகளிலேயே, துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- போக்குவரத்து ஊழியர்கள்