Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலை அமைத்து மூன்றே மாதங்களில் பள்ளம் பெருங்களத்துாரில் மின் வாரியம் அட்டூழியம்

சாலை அமைத்து மூன்றே மாதங்களில் பள்ளம் பெருங்களத்துாரில் மின் வாரியம் அட்டூழியம்

சாலை அமைத்து மூன்றே மாதங்களில் பள்ளம் பெருங்களத்துாரில் மின் வாரியம் அட்டூழியம்

சாலை அமைத்து மூன்றே மாதங்களில் பள்ளம் பெருங்களத்துாரில் மின் வாரியம் அட்டூழியம்

ADDED : அக் 04, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம், புதுபெருங்களத்துாரில் அடிப்படை பணிகளில் மண்டல அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை என, அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், புது பெருங்களத்துாரில் தார் சாலை அமைத்து சில மாதங்களில் மின் வடம் பதிக்க பள்ளம் தோண்டுவது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, சாலை அமைத்து ஒரு ஆண்டிற்கு அந்த சாலையில் பள்ளம் தோண்டக்கூடாது.

பள்ளம் தோண்ட வேண்டிய சூழல் இருந்தால், அப்பணிகள் முடிந்த பின்னரே சாலை அமைப்பது வழக்கம். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாலை அமைத்து சில மாதங்களில் பள்ளம் தோண்டுவது, மண்டல அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மைய தலைவர் மகேந்திர பூபதி கூறியதாவது:

மின் வாரியத்தில் இருந்து சாலைகளில் வடம் பதிக்க பள்ளம் தோண்டுவதற்கு கடிதம் கொடுத்து, பணம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், நேதாஜி சாலை, மோதிலால் தெருக்களில் தார் சாலை அமைத்து மூன்றே மாதங்களில் பள் ளம் தோண்டப்பட்டுள்ளது .

அதேபோல், கிருஷ்ணா சாலையிலும் ஆறே மாதங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் மின் வடம் பதிக்கப்பட உள்ளது என்பது, அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அப்படியானால், மின் வாரிய பணியை முடித்துவிட்டு சாலை அமைத்திருக்கலாம். தற்போது சாலை அமைத்து சில மாதங்களிலேயே பள்ளம் தோண்டுவதால், மக்கள் வரிப்பணம் வீணாகிஉள்ளது.

இதேபோல், பழைய பெருங்களத்துாரில் காமராஜர் நெடுஞ்சாலை, காமதேனு நகரிலும் புதிதாக சாலை அமைத்து, சில மாதங்களிலேயே பள்ளம் தோண்டி நாசப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மண்டல அதிகாரிகளின் அலட்சியத்தால், மக்கள் வரிப்பணம் தொடர்ந்து வீணடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

துாங்கி வழியும் அதிகாரிகள் தாம்பரம் மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேலிடம் கேட்டபோது, ''வடம் பதிக்க, மின் வாரியம் பணம் கட்டியுள்ளதாக மண்டல அதிகாரிகள் கூறுகின்றனர். அது தொடர்பான தகவல் மற்றும் சாலை எப்போது அமைக்கப்பட்டது என்ற விபரத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளேன்; பார்த்துவிட்டு கூறுகிறேன்,'' என்றார். தாம்பரம் மாநகராட்சி பொறியியல் பிரிவு எப்படி செயல்படுகிறது என்பதற்கு, மாநகராட்சி செயற்பொறியாளரின் இந்த பொறுப்பற்ற பதிலே சான்று.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us