Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையை ஆக்கிரமிக்கும் டூ-வீலர்கள் மறைமலை நகர் சிப்காட்டில் நெரிசல்

சாலையை ஆக்கிரமிக்கும் டூ-வீலர்கள் மறைமலை நகர் சிப்காட்டில் நெரிசல்

சாலையை ஆக்கிரமிக்கும் டூ-வீலர்கள் மறைமலை நகர் சிப்காட்டில் நெரிசல்

சாலையை ஆக்கிரமிக்கும் டூ-வீலர்கள் மறைமலை நகர் சிப்காட்டில் நெரிசல்

ADDED : செப் 26, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால், 'பீக் ஹவர்'சில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 270க்கும் மேற்பட்ட வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வருவோர், தங்களின் வாகனங்களை தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்துவதில்லை.

மாறாக, தொழிற்சாலையின் முன்பக்கம் உள்ள சாலையோரத்தில் நிறுத்துகின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களும் அங்கு நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

மறைமலை நகரில் சிப்காட் அமைக்கும் போதே, கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு, பெரிய அளவிலான சாலைகள் அமைக்கப்பட்டன.

தற்போது அந்த இடங்கள், அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. சிப்காட் வளாகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலை நிர்வாகங்கள், 'ஹெல்மெட்' அணியாமல் வரும் பணியாளர்களின் வாகனங்களை தொழிற்சாலை வளாகத்திற்குள் அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக, தொழிலாளர்கள் சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.

இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களால், இந்த பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

காமராஜர் சாலையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றி வரும் வேன், பேருந்து போன்ற வாகனங்கள், சாலையின் நடுவே நிறுத்தி பணியாளர்களை இறக்கி விடுகின்றன.

'பீக் ஹவர்'சில், அதே நேரத்தில் மற்ற தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்குகின்றனர். எனவே, சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, கடும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us