Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிராட்வே பேருந்து நிலையத்தில் கத்திகளுடன் 3 மாணவர்கள் கைது

பிராட்வே பேருந்து நிலையத்தில் கத்திகளுடன் 3 மாணவர்கள் கைது

பிராட்வே பேருந்து நிலையத்தில் கத்திகளுடன் 3 மாணவர்கள் கைது

பிராட்வே பேருந்து நிலையத்தில் கத்திகளுடன் 3 மாணவர்கள் கைது

ADDED : ஜூலை 25, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
வடக்கு கடற்கரை,பிராட்வே, ராஜாஜி சாலை, கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில், கல்லுாரி மாணவர்கள் மூவர், பயணியரை அச்சுறுத்தும் வகையில், கத்திகளுடன் சுற்றுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில், மாநிலக் கல்லுாரி மாணவர்களான தண்டையார்பேட்டை சாமுவேல், 20, கும்மிடிப்பூண்டி லோகேஷ், 19, மீஞ்சூர் ஸ்ரீகாந்த், 20, என்பது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன் இவர்களுக்கும், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பகையாக மாறி உள்ளது. அவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் காத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூவர் மீதும் ஆயுதத்தடைச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த இரு பட்டாக்கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

புரசைவாக்கத்தில் பஸ் மீது ஏறி ரகளை

கோயம்பேடில் இருந்து திருவொற்றியூருக்கு வழித்தடம் எண்: 159ஏ மாநகர பேருந்து நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.

புரசைவாக்கம் டவுட்டன் நிறுத்தத்தில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். இதில் சிலர் பக்கவாட்டு கம்பியை பிடித்து தொங்கியபடியும், சிலர் கூரையின் மீது ஏறியும் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், ஓடும் பேருந்தில் வழிநெடுகே கத்தியபடி பயணித்து அட்டகாசம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், அட்டகாசத்தில் ஈடுபட்ட சில மாணவர்களைக் கண்டுபிடித்த போலீசார், அவர்கள் படிக்கும் வேப்பேரி செயின்ட் பால்ஸ் பள்ளிக்கு சென்று, அவர்களை கண்டித்தனர். 'இதுபோன்ற அத்துமீறிய செயல்களில் இனி ஈடுபடமாட்டோம்' என, அவர்களிடம் எழுதி வாங்கினர்.

இதுகுறித்து பயணியர் கூறியதாவது:

சென்னையில் கல்லுாரி மாணவர்கள், பேருந்து மற்றும் ரயிலில் அட்டகாசத்தில் ஈடுபட்டு, பயணியருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.

பள்ளி மாணவர்களின் ரகளை, சமூகத்தின் அவல நிலையைக் காண்பிக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

முக்கிய வழித்தடங்களில், சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியது அவசியம். அதேநேரம், மாணவர்கள் என விடாமல், நுாதன தண்டனை வழங்க வேண்டும்.

பல இடங்களில், மாணவர்களை தட்டிக்கேட்கும் நடத்துனர்களும், ஓட்டுனர்களும் மர்ம கும்பல்களால் தாக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us