Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அதிகரிக்கும் கடைகளுக்கு கடிவாளம்

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அதிகரிக்கும் கடைகளுக்கு கடிவாளம்

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அதிகரிக்கும் கடைகளுக்கு கடிவாளம்

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அதிகரிக்கும் கடைகளுக்கு கடிவாளம்

ADDED : ஜூலை 13, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
பெசன்ட் நகர், சென்னையில் மெரினா கடற்கரைக்கு அடுத்து, அதிக மக்கள் கூடும் கடற்கரையாக பெசன்ட் நகர் உள்ளது. இங்கு, 2013ம் ஆண்டு மாநகராட்சி கணக்கெடுப்புபடி, 245 கடைகள் இருந்தன.

கடந்த 2021ம் ஆண்டு, மாநகராட்சி நியமித்த ஆர்.இ.பி.எல்., என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில், 645 கடைகள் என கண்டறியப்பட்டது.

கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்குபின், 1,200 கடைகளாக அதிகரித்தன. பலர் கடைகளை, 25 அடி சுற்றளவாக விரிவுபடுத்தி உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாலையில் இருந்து பார்த்தால் மணல், கடல்நீர் தெரியும். தற்போது, கண்ணுக்கு எட்டும் துாரம் வரை, கடைகளாக படர்ந்துள்ளன.

இதனால், கடற்கரை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடைகளால், பொதுமக்கள் கடற்கரைக்கு எளிதில் சென்றுவரவோ, மணலில் அமர்ந்து பேசவோ முடியவில்லை.

இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, வியாபார பொருட்களை அவர்களிடம் திணிக்கும் வகையில், அலையை ஒட்டி கடைகள் முளைத்து வந்தன. இதனால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.

இது குறித்து, பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி கமிஷனருக்கு புகார் சென்றது. இதையடுத்து, தெற்கு வட்டார இணை கமிஷனர் அமித், மண்டல அதிகாரிகளுடன், கடற்கரையை ஆய்வு செய்தார். வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கை மற்றும் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடல் அலையில் இருந்து 50 அடி துாரத்தில், 500 மீட்டர் நீளம், 5 அடி உயரத்தில் சவுக்கு கம்பு கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதை தாண்டி வந்து கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, கடற்கரைக்கு வருவோர், நிம்மதியாக அலையை ரசிக்க முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

பெசன்ட் நகர் கடற்கரையில் அதிக மக்கள் கூடும் கடற்கரையாக மாறிவிட்டது. அதற்கு ஈடாக கடைகளும் அதிகரித்து உள்ளன. கடைகளை வரைமுறைப்படுத்த, கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தேவை. பொதுமக்கள் புகாரை தொடர்ந்து, வழிவிட்டு தடுப்பு அமைத்துள்ளோம். இனிமேல், கடல் அலையில் இருந்து 50 அடி துாரம் வரை பொதுமக்கள் சுதந்திரமாக அமர்ந்திருக்க முடியும். அலை சீற்றம் அதிகமாக இருப்பதால், கடலில் இறங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

- மாநகராட்சி அதிகாரிகள்

இயற்கையை ரசிக்கும் வகையில், வாரந்தோறும் கணவர், குழந்தைகளுடன் கடற்கரைக்கு சென்று, 2, 3 மணி நேரம் வரை அமர்ந்து உரையாடி மகிழ்வோம். முன்பு 60 அடி துாரத்தில் கடைகள் இருந்தன. நிம்மதியாக கடற்கரையை பயன்படுத்தினோம். இப்போது, அமரும் இடத்தில் கடையை போட்டதால், பல்வேறு வகைகளில் இடையூறு ஏற்பட்டது. மாநகராட்சி தடுப்பு அமைத்ததை வரவேற்கிறோம். தற்காலிகமாக இல்லாமல், நிரந்தர தடுப்பாக இருக்க வேண்டும்.

- சவுமியா, 35, அடையாறு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us