Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏர்போர்ட் திரையரங்கு மூடல் விவகாரம் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு

ஏர்போர்ட் திரையரங்கு மூடல் விவகாரம் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு

ஏர்போர்ட் திரையரங்கு மூடல் விவகாரம் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு

ஏர்போர்ட் திரையரங்கு மூடல் விவகாரம் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு

ADDED : ஜூன் 20, 2025 12:29 AM


Google News
சென்னை, சென்னை விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்தங்களை மேம்படுத்துவது தொடர்பாக, மீனம்பாக்கம் 'ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்துடன், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், 2018ல் ஒப்பந்தம் செய்தது.

கார் நிறுத்தும் இடத்தில், திரையரங்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, 'பி.வி.ஆர்., ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ்' நிறுவனத்துடன், துணை ஒப்பந்தமும் செய்யப்பட்டது; 2023, பிப்ரவரி முதல் திரையரங்கு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணைய சட்டப்படி, விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகளுக்கு அனுமதியில்லை எனக்கூறி, திரையரங்கை மூட கோரி, மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனத்துக்கு, விமான நிலையங்கள் ஆணையம் கடிதம் அனுப்பியது.

மேலும், விமான நிலையத்தில், 4.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கார் நிறுத்தம் உள்ளிட்ட வளாகத்தை, தாங்களே நிர்வகிக்க இருப்பதாகக்கூறி, மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.வி.ஆர்., ஐநாக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பி.வி.ஆர்.ஐநாக்ஸ் தரப்பில், 'திரையரங்கம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிடப்பட்டது.

விமான நிலையங்கள் ஆணையத்தின் தரப்பில், 'சட்டப்படி விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகள் அமைக்க அனுமதியில்லை. பி.வி.ஆர்.ஐநாக்ஸ் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, முடிவு தெரிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, பி.வி.ஆர்.ஐநாக்ஸின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us