Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

UPDATED : அக் 17, 2025 10:41 AMADDED : அக் 17, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு, நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்டு செல்ல துவங்கி விட்டனர். இதனால், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், சென்னை, புறநகரில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் புறப்படத் துவங்கிவிட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், அதிகளவில் புறப்பட்டு செல்வதால், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம், நேற்று அதிகமாக இருந்தது.

சென்னையில் இருந்து மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., மாநிலம் செல்லும் விரைவு ரயில்களில், பயணியர் கூட்டம் அலைமோதியது. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளிக்கு, இதுவரை மொத்தம் 23 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளிமாநிலங்களுக்கு செல்வோர், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தாலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும், அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து ரயில்களில் மட்டும் மூன்று லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் செல்வோர், நாளை முதல் அதிகளவில் செல்வர் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம், நேற்று முதல் துவங்கியது. முதல் நாள் என்பதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில், பயணியர் கூட்டம் பெரிய அளவில் இல்லை. இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக இருந்தன.

2,165 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கம்

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியையொட்டி, நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதல் நாளான நேற்று, அதிகளவில் பயணியர் கூட்டம் இல்லை. அரசு விரைவு பேருந்துகளில் இன்று பயணம் செய்ய, மொத்தம் 82,300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணியர் கூட்டம் இன்று அதிகமாக இருக்கும் என்பதால், சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் 2,092 பேருந்துகளோடு, 2,165 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரத்தில் இருந்து, இன்று இரவு 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:30 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும். செங்கோட்டையில் இருந்து, வரும் 20ம் தேதி இரவு 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:45 மணிக்கு தாம்பரம் வரும்.
* எழும்பூரில் இருந்து, இன்று இரவு 11:45 மணிக்கு புறப்படும் முன் பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு மதுரைக்கு செல்லும்.
* மதுரையில் இருந்து, வரும் 18ம் தேதி பகல் 12:00 மணிக்கு புறப்படும் முன் பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 7:15 மணிக்கு தாம்பரம் வரும்.
* எழும்பூரில் இருந்து, நாளை இரவு 11:45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு மதுரை செல்லும்.
* மதுரையில் இருந்து, வரும் 21ம் தேதி இரவு 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறு நாள் அதிகாலை 4:30 மணிக்கு தாம்பரம் வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us