Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில் சந்தேகம்

வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில் சந்தேகம்

வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில் சந்தேகம்

வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித்தன்மையில் சந்தேகம்

UPDATED : செப் 19, 2025 07:52 PMADDED : செப் 17, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
வண்டலுார் : வண்டலுார் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில், கான்கிரீட் சாலையை இணைக்க அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டங்களை வாகனங்கள் கடக்கும்போது, காதை பிளக்கும் வகையில் பயங்கர சத்தம் உருவாகிறது. இதனால் அச்சமடையும் வாகன ஓட்டிகள், மேம்பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளதாக சந்தேகப்படுகின்றனர்.

Image 1470602


செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகிலிருந்து, வாலாஜாபாத் சாலை துவங்குகிறது. இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

வண்டலுார் ரயில் நிலையம் வழியாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் அடிக்கடி சென்று வருவதால், ரயில் தண்டவாளத்தைக் கடந்து, வாலாஜாபாத் சாலைக்குச் செல்ல, வாகனங்கள் அதிக நேரம் காத்துக்கிடந்தன.



இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டன.

இதற்கு தீர்வாக, ஜி.எஸ்.டி., சாலையுடன், வாலாஜாபாத் சாலையை இணைக்கும் வகையில், கடந்த 2011 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 27 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.

அதன்படி, மொத்தம் 1.5 கி.மீ., துாரம், 25 அடி அகலம் உள்ள மேம்பாலம் கட்டப்பட்டு, 2012ல் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த பாலத்தின் மேல்பகுதி கட்டுமானத்தில் உள்ள கான்கிரீட் சாலை, 84 பெட்டிகளாக அமைக்கப்பட்டு, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்க, இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கான்கிரீட் சட்டங்களை இணைக்கும் பகுதியில், இரண்டு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு சட்டங்கள் உடைந்தன.

இதனால், வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லும் போது, உடைந்த இரும்பு சட்டங்கள் கான்கிரீட் சாலையுடன் உராய்ந்து, காதைப் பிளக்கும் சத்தம் ஏற்பட்டு வந்தது. இது, வாகன ஓட்டிகளை பெரிதும் அச்சுறுத்தியது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து, மேம்பாலத்தை ஆய்வு செய்த தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உடைந்த இரும்பு சட்டங்களை அப்புறப்படுத்தி, தேவையான இடங்களில் புதிய இரும்பு சட்டங்களை பொருத்தும் பணியை, கடந்த ஜூலை 20ம் தேதி துவக்கினர்.

பணிகள் ஒரு வார காலம் தொடர்ந்த நிலையில், கூடுதலாக 33 இடங்களில் இரும்பு சட்டங்கள் சேதமாகி உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, 45 நாட்கள் தொடர்ந்து பணிகள் செய்து, அனைத்து இரும்பு சட்டங்களையும் சரி செய்தனர்.

இந்நிலையில், சரி செய்யப்பட்ட இரும்பு சட்டங்கள் மீண்டும் சேதமடைந்து, மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது, அதே போன்று காதைப் பிளக்கும் சத்தம் ஏற்பட்டு வருகிறது.

இந்த சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

10 நாளில் மீண்டும் சத்தம் இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: தாம்பரம் -- கூடுவாஞ்சேரி மார்க்கத்தில், மிக முக்கிய சந்திப்பாக வண்டலுார் மேம்பாலத்தின் வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு உட்பட பல முக்கிய இடங்களுக்கு அரசு பேருந்துகள் உட்பட, பலவித கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. மேம்பாலத்தில் கனரக வாகனங்களை இயக்கும்போது 'டமால் டமால்' என சத்தம் எழுந்தது. இதனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணிகளை ஆகஸ்டில் முடித்தனர். சீரமைப்பு பணிகள் முடிந்து 10 நாட்களே ஆன நிலையில், மீண்டும் இரும்பு சட்டங்களிலிருந்து காதைக் கிழிக்கும் அளவிற்கு சத்தம் ஏற்படுகிறது. மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட் சாலையும், பல இடங்களில் பெயர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் நாளுக்கு நாள் பெரிதாகிறது. மழைக் காலங்களில் இந்த விரிசல்களில் தண்ணீர் புகுந்து, பாலத்தை வலுவிழக்கச் செய்யும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இரும்பு சட்டங்களிலிருந்து எழும் சத்தத்தை நீக்க, தரமான முறையில் பழுது பார்ப்பு பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



துாக்கமின்றி தவிப்பு வண்டலுார் மேம்பால பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் பயணிக்கும்போது, மேம்பாலத்தில் ஏதோ விபத்து நடப்பது போல் சத்தம் கேட்கிறது. கனரக வாகனங்கள் பயணிக்கும் போது, பாலம் உடைந்து விழுவது போன்று, 500 மீட்டர் சுற்றுப்பகுதியில், சத்தம் காதைப் பிளக்கிறது. இரவு நேரங்களில் சத்தத்தின் அளவு அதிகமாக உள்ளதால், துாக்கமின்றி தவிக்கிறோம். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மேம்பாலத்தின் உறுதித் தன்மையை அதிகாரிகள் சோதனை செய்து, சத்தம் வராமல் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ***







      Our Apps Available On




      Dinamalar

      Follow us