Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணா மேம்பாலத்தில் இருந்து மாநகர பேருந்து தலைக்குப்புற விழுந்த விபத்தில் ஓட்டுநர் விடுதலை 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

அண்ணா மேம்பாலத்தில் இருந்து மாநகர பேருந்து தலைக்குப்புற விழுந்த விபத்தில் ஓட்டுநர் விடுதலை 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

அண்ணா மேம்பாலத்தில் இருந்து மாநகர பேருந்து தலைக்குப்புற விழுந்த விபத்தில் ஓட்டுநர் விடுதலை 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

அண்ணா மேம்பாலத்தில் இருந்து மாநகர பேருந்து தலைக்குப்புற விழுந்த விபத்தில் ஓட்டுநர் விடுதலை 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

ADDED : மே 13, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
சென்னை :சென்னை, அண்ணா மேம்பாலத்தில் இருந்து மாநகர பேருந்து தலைக்குப்புற கீழே விழுந்த விபத்து தொடர்பான வழக்கில், 12 ஆண்டுகளுக்கு பின், ஓட்டுனரை விடுதலை செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அடுத்த குன்றத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், 48. இவர், மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார்.

கடந்த 2012 ஜூன் 27ம் தேதி, பாரிமுனையில் இருந்து வடபழனி செல்லும், வழித்தட எண் '17எம்' பேருந்தை ஓட்டி சென்றார். பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.

தேனாம்பேட்டை, அண்ணா மேம்பாலத்தின் இடதுபுற வளைவில் பேருந்து திரும்பும்போது, பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்து கொண்டு, பேருந்து தலைக்குப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த பயணியர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டது, கொடுங்காயம் ஏற்படுத்தியது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் பிரசாத்தை கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கை, 4வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் ஆர்.சுப்பிரமணியன் விசாரித்தார்.

ஓட்டுநர் பிரசாத் தரப்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ''ஜாக்கிரதை, வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்படவில்லை. டிரைவர் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல. பேருந்தை ஓட்டுநர் இயக்கியபோது, மொபைல் போனில் பேசவில்லை. பாலத்தில் திரும்பும்போது, ஓட்டுநரின் இருக்கை திடீரென கழன்றதால், 'ஸ்டீயரிங் லாக்' ஆகி, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் பழுது ஏற்பட்டு உள்ளது என, ஏற்கனவே அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநரும் புகார் அளித்துள்ளார். அதை கருத்தில் கொள்ளாமல், பேருந்தை மீண்டும் இயக்க வழங்கியுள்ளனர். சாட்சிகள் அளித்தவர்களில் பெரும்பாலானோர், 'ஸ்டீயரிங் வீல்' லாக் ஆனதாக தெரிவித்துள்ளனர். எனவே, இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறு தான். இந்த விபரங்கள் விசாரணையில் அரசு தரப்பில் வெளிப்படுத்தப்படவில்லை'' என்றார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

விபத்து மாநகர போக்குவரத்து கழகத்தின் தவறால் நடந்துள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் கொண்டது.

அங்கு ஒரு பேருந்தை 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். இவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் பேருந்தை வேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக, சந்தேகத்துக்கு அப்பால் அரசு தரப்பால் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, விபத்துக்கான காரணம், இந்த குற்றச்சாட்டுகள் அல்ல என்பதால், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து, ஓட்டுனர் பிரசாத்தை விடுதலை செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us