Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சீசன் முடிந்தும் கேளம்பாக்கத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்

சீசன் முடிந்தும் கேளம்பாக்கத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்

சீசன் முடிந்தும் கேளம்பாக்கத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்

சீசன் முடிந்தும் கேளம்பாக்கத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்

ADDED : மே 13, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
வழக்கமான சீசன் காலம் முடிந்த பிறகும், சென்னை கேளம்பாக்கம் பகுதியில், 14 வகையான வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன.

பொதுவாக ஆண்டு தோறும், செப்., - அக்., மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன.

இந்த பறவைகள், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் வரையிலான பல்வேறு நீர்நிலைகளில் தங்கி செல்கின்றன.

கோடையின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், மே முதல் வாரத்துக்குள், வெளிநாட்டு பறவைகள் திரும்பி செல்வது வழக்கம்.

தமிழகத்தின் பல்வேறு நீர் நிலைகளிலும் வெளிநாட்டு பறவைகள் திரும்பி சென்று விட்ட நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைக்கு இடைப்பட்ட கேளம்பாக்கம், நெமிலிச்சேரி பகுதி நீர்நிலைகளில் இன்னும் முகாமிட்டுள்ளன.

இப்பகுதி வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாத நிலையில், இங்கு அரிய வகை பறவைகள் தங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:

தமிழகத்துக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு பறவைகள், ஏப்., இறுதியில் அல்லது மே முதல் வாரத்திற்குள் திரும்பி சென்றுவிடும்.

குறிப்பிட்ட சில பறவைகள், ஆக., இறுதியில், சீசன் துவங்கும் முன் வருகின்றன. மற்ற பறவைகள் சென்ற பிறகும் சில காலம் இங்கு தங்குகின்றன.

குறிப்பாக இனப்பெருக்க பருவம் எட்டாத பறவைகள், தங்களின் பூர்வீகத்திற்கு செல்லாமல், தேவையான உணவு கிடைக்கும் வரை,கூடுதல் காலம் இங்கேயே தங்கும்.

இந்த வகையில், சாதா உள்ளான், செங்கால் உள்ளான், பெரிய பூநாரை, மங்கோலிய பட்டானி உப்புகொத்தி உள்ளிட்ட, 14 வகையான பறவைகள் கேளம்பாக்கம், நெமிலிச்சேரி பகுதியில் தங்கியுள்ளன.

வெளியாட்கள் தொந்தரவு இல்லாத நிலையில், தொடர்ந்து தங்குகின்றன. இப்பகுதியின் சூழலியல் சிறப்பு இவற்றுக்கு ஏற்றதாக இருப்பதே இதற்கு காரணம். இந்த சூழலியல் தன்மையை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த பறவைகள்?

கேளம்பாக்கம், நெமிலிச்சேரி பகுதியில் தங்கியுள்ள வலசை பறவைகள்:1. செங்கால் உள்ளான்2. புள்ளி செங்கால் உள்ளான்3. பெரிய பூநாரை4. வளைமூக்கு பெருங்கண்ணி5. அரிவாள் மூக்கு உள்ளான்6. சாம்பல் உப்புகொத்தி7. மங்கோலிய பட்டாணி உப்புகொத்தி8. பெரிய பட்டாணி உப்புகொத்தி9. வளைமூக்கு மண் கொத்தி10. டெரக் மண் கொத்தி11. பச்சைக்கால் உள்ளான்12. பொரி மண் கொத்தி13. சிறு கொமு உள்ளான்14. மெல்லிய அலகு கடற்காக்கை***



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us