Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முருகன் கோவில் பங்குனி உத்திரம் விழா நடத்த கோரிய மனு முடித்து வைப்பு

முருகன் கோவில் பங்குனி உத்திரம் விழா நடத்த கோரிய மனு முடித்து வைப்பு

முருகன் கோவில் பங்குனி உத்திரம் விழா நடத்த கோரிய மனு முடித்து வைப்பு

முருகன் கோவில் பங்குனி உத்திரம் விழா நடத்த கோரிய மனு முடித்து வைப்பு

ADDED : மார் 20, 2025 12:43 AM


Google News
சென்னை, பங்குனி உத்திரம் பால் காவடி வேல் பூஜை சபை சார்பில், அதன் தலைவர் தாமோதரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

போரூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 48வது ஆண்டாக, ஏப்., 10 முதல் 12ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது; தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.

இதற்கு அனுமதி கோரி, பிப்., 4ல், ஹிந்து அறநிலையத் துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கை மனுவை அறநிலைய துறை பரிசீலிக்கவில்லை.

கடந்த 47 ஆண்டுகளாக, சபா சார்பில் பங்குனி உத்திர திருவிழாவை நேர்மையாக நடத்தியது, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.

அறநிலையத் துறை செயல் என்பது, தெய்வீக நம்பிக்கையை அவமதிப்பதாகவும், கோவிலின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீறுவதாகவும் உள்ளது.

பங்குனி உத்திர திருவிழா, தேர் திருவிழாவை, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நடத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, ''மனுதாரர் தரப்பு மட்டும் விழாவை நடத்த தனி உரிமை கோருவதாக இருந்தால், அதுதொடர்பாக அறநிலையத் துறை கமிஷனரை தான் அணுக வேண்டும். விழாவை தனியாக நடத்த அனுமதிக்க முடியாது. ஆனால், பக்தராக பங்கேற்பதாக இருந்தால் பங்கேற்கலாம்,'' என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதி, கோவிலில் அனைவரும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. அனைத்து மக்களும் பங்கேற்கும் திருவிழாவில் பக்தராக பங்கேற்பதாக இருந்தால் எவ்வித தடையும் இல்லை. விழாவை நடத்த தனி உரிமை கோருவதாக இருந்தால், அது தொடர்பாக அறநிலையத் துறையிடம் மனு அளித்து அனுமதி பெற்று கொள்ளலாம் எனக்கூறி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us