Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுகள் குடிநீர் விஷமாகும் அபாயம்

செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுகள் குடிநீர் விஷமாகும் அபாயம்

செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுகள் குடிநீர் விஷமாகும் அபாயம்

செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுகள் குடிநீர் விஷமாகும் அபாயம்

ADDED : பிப் 02, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
குன்றத்துார், செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்பு கழிவுநீர் கலப்பதால் ஏரிநீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் நீர் விஷமாகும் ஆபத்து உள்ளது என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரை நீளம் 8.30 கி.மீ., செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்மட்ட உயரம் 24 அடி. ௧௦ மதகு கொண்டது.

ஏரியின் மேற்புற பகுதியில் ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இதுதவிர ஏரியின் மேற்புறப் பகுதியில் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கீவளூர், தண்டலம், மேவளூர்குப்பம், செம்பரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் மேற்கண்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது.

மேலும், தொழிற்சாலைகளின் திடக்கழிவுகள் காலி நிலத்தில் கொட்டி எரிக்கப்படுகின்றன. இவையும் மழைக் காலத்தில் நீரில் அடித்து வரப்பட்டு கலப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடைந்து வருகிறது.

'இதேபோக்கு நீடித்தால், எதிர்காலத்தின் ஏரியின் நீர் மிக மோசமான நிலைக்கு சென்றுவிடும். மக்களின் குடிநீர் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிநீரில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்' என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுகள் கொட்டுவோர் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு அறிக்கை அனுப்பி, கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்' என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ் கூறியதாவது:

தொழிற்சாலை கழிவுநீர் முறையாக சுத்திகரித்தே வெளியேற்றப்படுகிறது. தொழிற்சாலையில் இருந்து திடக்கழிவுகளை எடுத்துச் செல்வோரை அழைத்து கூட்டம் நடத்தி, பொது இடத்தில் கழிவுகளை கொட்டி எரிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

கழிவுகள் நீர்நிலைகள், பொது இடத்தில் கொட்டப்பட்டிருந்தால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.-

இவ்வாறு அவர் கூறினார்.

குளிப்போருக்கு உடலரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிநீரை, 25 ஆண்டுகளாக குடித்து வருகிறோம். தெளிவாக இருந்த ஏரி தண்ணீர் தற்போது கலங்கலாக உள்ளது. ஏரியில் குளித்தால் உடல் அரிப்பு ஏற்படுகிறது. தண்ணீரின் தரம் 30 சதவீதத்திற்கு மேல் மாசடைந்து விட்டது. தற்போதாவது, அரசு விழித்துக் கொண்டு கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால், தண்ணீரின் தரம் படுமோசமான நிலைக்கு சென்றுவிடும்.

- ஆர்.சந்தோஷ், செம்பரம்பாக்கம்.

எங்கெங்கு பிரச்சனைகள்!

* நந்தம்பாக்கம், கீவளூர், மேவளூர்குப்பம், செம்பரம்பாக்கம் ஊராட்சி பகுதியில் ஏரியின் உள்ளே பிளாஸ்டிக் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது* புதுப்பேடு மற்றும் காட்டரம்பாக்கம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது* ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் உள்ளதால், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள், செம்பரம்பாக்கம் ஏரியின் பிரதான நீர்வரத்துக் கால்வாயான சவுத்திரி கால்வாய் மூலம், செம்பரம்பாக்கம் ஏரிக்குள் செல்கிறது* கீவளூர் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளே கொட்டி எரிக்கப்படுகிறது. மேலும், தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுநீர் கீவளூர் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்குள் செல்கிறது* இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள வடிகால்வாயில் சேகரமாகும் கழிவுநீர், மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அடித்துச் செல்லப்படுகிறது* தண்டலம், செட்டிப்பேடு, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கின்றன* மேவளூர்குப்பம் ஊராட்சியில் எல்லையில் உள்ள தொழிற்சாலைகள், சமையல் கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் கிருஷ்ணா கால்வாய் வழியே செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது* சென்னை-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், கழிவுகளை செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புறப் பகுதியில் தண்டலம் அருகே வீசி செல்கின்றன. இதனால் ஏரியின் மேற்புறப் பகுதி முழுதும் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளன* செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரம், பழஞ்சூர், செம்பரம்பாக்கம் கிராமம் வழியே கழிவுநீர் ஏரிக்குள் செல்கிறது. குப்பைக் கழிவுகள் ஏரியின் உள்ளே கொட்டி எரிக்கப்படுகிறது* திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே கடந்து செல்லும் கூவம் ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய் நேமம், வெள்ளவேடு, திருமழிசை துணைநகரம் வழியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. இந்த கால்வாயின் வழியே குடியிருப்பில் இருந்து வெளியேரும் கழிவுகள், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கின்றது* செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புறப் பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து டேங்கர் லாரிகளில் அகற்றப்படும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயில் கொட்டப்படுகின்றன. இவை அனைத்தும் மழைக்காலத்தில் ஏரிக்குள் செல்கின்றது* குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் அருகே ஏரியின் உள்ளே ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன







      Our Apps Available On




      Dinamalar

      Follow us