Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உள்ளாட்சி நிர்வாகங்கள் வரிவசூல் செய்வதில் தீவிரம்

உள்ளாட்சி நிர்வாகங்கள் வரிவசூல் செய்வதில் தீவிரம்

உள்ளாட்சி நிர்வாகங்கள் வரிவசூல் செய்வதில் தீவிரம்

உள்ளாட்சி நிர்வாகங்கள் வரிவசூல் செய்வதில் தீவிரம்

ADDED : மார் 14, 2025 11:05 PM


Google News
பெ.நா.பாளையம்; வரி வசூலை தீவிரப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகள் உள்ளன. இதில், வரி வசூலில் பல ஊராட்சிகள் பின்தங்கி உள்ளன என்றும், அவைகளுக்கு உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் தரப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், வரி வசூலுக்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் எனவும், வரி வசூலில் மிகவும் பின்தங்கிய உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிர வரி வசூலில் முனைப்பு காட்ட வேண்டும் எனவும், குறிப்பிட்ட ஊராட்சிகளில் தினமும் வரி வசூல் செய்தது எவ்வளவு என அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இது குறித்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சொத்து வரி, வணிக வளாக வரி, குடிநீர் கட்டணம், உரிம கட்டணம் உள்ளிட்ட வரி பாக்கிகளை வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் வீட்டில் இருந்து 'ஆன்லைன்' வாயிலாக வரி செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதை பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இம்மாதம், 31ம் தேதிக்குள் வரி வசூல் செய்து, முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரி பாக்கி அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வாயிலாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வரி பாக்கிகளை அலுவலகத்திற்கு நேரில் வந்து கட்டி முடிக்காதவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வாயிலாக வரிகளை செலுத்தலாம்.

வரி செலுத்தாதவர்களின் வீடு, நிறுவனம் ஆகியவற்றில் குடிநீர் குழாய் துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us