Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 89,000 வீடுகள் கட்ட 2025 ஜூன் வரை கெடு

89,000 வீடுகள் கட்ட 2025 ஜூன் வரை கெடு

89,000 வீடுகள் கட்ட 2025 ஜூன் வரை கெடு

89,000 வீடுகள் கட்ட 2025 ஜூன் வரை கெடு

ADDED : ஜூலை 04, 2024 04:37 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் கட்டப்படும் 89,429 வீடுகளின் கட்டுமானப் பணிகளை, 2025 ஜூன் மாதத்துக்குள் முடிக்க, தமிழக அரசு கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில், ஏழை மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, வீடுகள் கட்டப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் நிதியை அடிப்படையாக வைத்து, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில், சொந்தமாக பட்டா நிலம் வைத்துள்ளவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வீட்டுக்கு தலா, 3.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகின்றன.

இதன் அடிப்படையில், 12,619 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4.10 லட்சம் வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு மானியம் பெற்று தரும் பொறுப்பை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஏற்றது.

இத்திட்டத்தின்படி, உரிய மானியம் வழங்கப்பட்டும், பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசு ஒப்புதல் அளித்த, 4.10 லட்சம் வீடுகளில் இதுவரை, 3.10 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன; எஞ்சிய பணிகள் நிலுவையில் உள்ளன.

இத்திட்டத்தில், மானியத் தொகை முழுமையாக வழங்கப்பட்ட நிலையில், 89,429 வீடுகள் கட்டும் பணிகள் பாதியில் நிற்கின்றன. பாதியில் நிற்கும் கட்டுமான பணிகளை, 2025 ஜூனுக்குள் முடிக்க வேண்டும் என, தமிழக அரசு கெடு விதித்துள்ளது.

இதுகுறித்து, மானியம் பெற்ற பயனாளர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், தற்போது 10,433 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us